12th Tamil - Book Back Answers - Unit 5 - Guides

  
 
 



 


    Plus Two / 12th Tamil - Book Back Answers - Unit 5 - Download

    Tamil Nadu Board 12th Standard Tamil - Unit 5: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 5 – from the Tamil Nadu State Board 12th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 5 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 5 

    I. திறன் அறிவோம்

    அ) பலவுள் தெரிக.

    1.திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் என்பதை முதன்முதலில் நிகழ்த்திக் காட்டியவர் _________.
    அ) லூமியர் சகோதரர்கள்
    ஆ) ஜார்ஜ் மிலி
    இ) தாமஸ் ஆல்வா எடிசன்
    ஈ) சாமிக்கண்ணு வின்சென்ட்
    விடைகுறிப்பு: 
    ஆ) ஜார்ஜ் மிலி

    2. 'மனித குலத்திற்குத் தேவை போரல்ல; நல்லுணுர்வும் அன்பும்தான்' என்பதை மையக்கருவாகக் கொண்ட சார்லி சாப்லின் திரைப்படம் _________.
    அ) தி கிங்
    ஆ) தி சர்க்கஸ்
    இ) தி கோல்டு ரஷ்
    ஈ) தி கிரேட் டிக்டேட்டர்
    விடைகுறிப்பு: 
    ஈ) தி கிரேட் டிக்டேட்டர்

    3. மாசித் திங்களில் நிகழும் விழாவாக மயிலைப் பதிகம் சுட்டுவது _________.
    அ) விளக்குத் திருவிழா
    ஆ) ஓண விழா
    இ) கடலாட்டு விழா
    ஈ) திருவாதிரை விழா
    விடைகுறிப்பு: 
    இ) கடலாட்டு விழா

    4. உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்' - இத்தொடர் உணர்த்தும் பண்பு _________.
    அ) நேர்மறைப் பண்பு
    ஆ) தயக்கப் பண்பு
    இ) முரண்பண்பு
    ஈ) இவை அனைத்தும்
    விடைகுறிப்பு: 
    இ) முரண்பண்பு

    5. 'வாளால் அறுத்துச் சுடினும்."- இவ்வடியின் மூலம் குலசேகராழ்வார் வெளிப்படுத்துவது _________.
    அ) போர்
    ஆ) மருத்துவம்
    இ) விளையாட்டு
    ஈ) வேளாண்மை
    விடைகுறிப்பு: 
    ஆ) மருத்துவம்

    ஆ) குறு வினா

    1. பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்? சான்று தருக.
            பாத்திரங்களின் மனக்கவலைகள், அலைக்கழிப்புகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதும் எதிரொலிப்பதும் பின்னணி இசை.

            சான்று கதாநாயகி சன்னல் வழியாகத் தலைநீட்டி ஒரு காட்சியை வெறித்துப் பார்க்கிறாள். அக்காட்சியில் தெருவைப் பார்ப்பது மட்டுமே காட்டப்படுகிறது. அக்காட்சியில் ஒரு மகிழுந்து புறப்பட்டுச் செல்லும் ஒலி இணைக்கப்படுகிறது. 
     
            இதில் அவளைப் பார்க்க வந்தவர், அவள் விருப்பத்திற்கு மாறாக அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார் என்ற கதை, அப்பெண்ணின் முகபாவனை மூலமே சொல்லப்படுகிறது. இவ்வகையில் பாத்திரங்களின் உணர்வுகளுக்கு உயிரூட்டி விரிவுரை வழங்குவதாக இருக்கிறது பின்னணி இசை.

    2. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
            உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும், அது நன்மைக்கே என்று உணர்கின்ற நோயாளி, மருத்துவரை நேசிக்கின்றார்.

            அத்துடன் அம்மருத்துவர் நோயைக் குணமாக்கி விடுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார். இந்த மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் நோயாளியைக் குணப்படுத்தும் பாங்கு புலப்படுகிறது.

    3. கலிவிழா, ஒலிவிழா விளக்கம் தருக.
    கலிவிழா:

            'எழுச்சி தரும் விழா' என்பது கலிவிழா.
            மக்களுக்கு எழுச்சி தரும் வகையில் உற்சாகமுடன் கொண்டாடப்படும் விழா.

    ஒலிவிழா: 
            'ஆரவார விழா' என்பது ஒலிவிழா
            மங்கல வாத்தியங்களின் ஒலி, வாழ்த்துப் பாடல்களின் இசை ஒலி போன்ற ஆரவாரங்களோடு களிப்புடன் கொண்டாடப்படும் விழா.

    4. 'தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே' தொடருக்குப் பதவுரை எழுதுக.
            அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் கந்தவேளே!' என்பது பொருள்.

    இ) சிறு வினா

    1. திரைப்படத்தின் காட்சி ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக. 
            திரைப்படத்தில் காட்சி சிறப்பாக அமைந்தால், வசனம் இரண்டாம் பட்சமாகிவிடும். திரைப்படத்தில் வசனம் இன்றி, காட்சிகளை அடுத்தடுத்து வைத்துக் கதையை நகர்த்துவர். திரைப்படத்தில் நடிப்பவனை முப்பரிமாணத்தில் காட்டும் காட்சிகள் இடம்பெறும்.

            கதை நகர்வுக்கு உதவும் காட்சி மாற்றங்களான காட்சி மறைவு, காட்சி உதயம், காட்சிக் கலவை அல்லது கூட்டு, காட்சி அழிப்பு என்னும் உத்திகளை ஏற்ற இடங்களில் இயக்குநரும் தொகுப்பாளரும் கையாண்டு காட்சியின் ஆற்றலைப் புலப்படுத்தி வெற்றி காண்கின்றனர்.

            ஒருவன் ஓடிவருவதாகக் காட்டிவிட்டு, 'என்னாச்சு' என்று கேட்டால் போதும். இது காட்சி மொழியாகிவிடும். ஒருவன் உணர்ச்சியைக் காட்ட முகத்தைக் காட்சியாகக் காட்டினால் போதும்.

            கட்டுப்படுத்தப்படாத கோபத்தைக் காட்ட, நடிகன் கத்த வேண்டியது இல்லை; கண்ணாடிக் குடுவையை இறுகப்பிடித்து உடைப்பதைக் காட்டினால் போதும். இப்படியாகக் கதை நகர்வுக்குத் திரைப்படக் காட்சி உதவுகிறது.

    2. இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?
            கந்தவேளிடம் இராமலிங்க அடிகள், ஒரு நெறிப்பட்ட மனத்துடன் இறைவனது மலர்போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்களின் உறவு தமக்கு வேண்டும் என்கிறார்.

            தம் உள்ளத்தில் ஒன்றை நினைத்துக் கொண்டு, புறத்தில் வேறொன்றைப் பேசும் வஞ் சகர்களின் உறவு தமக்கு ஏற்படாமல் காக்குமாறும் கந்தவேளிடம் வேண்டுகிறார்.

    3. பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறையைத் திருஞானசம்பந்தர் எவ்வாறு பதிவு செய்கிறார்?
            இளம் பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர் திருமயிலை. அங்கு எழுச்சி மிக்க விழாக்கள் நிகழும்.

            மயிலைக் கபாலீச்சரம் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திரமானது, அன்றுமுதல் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறது.

            பங்குனி உத்திரத் திருவிழாவானது மங்கல வாத்தியம் மற்றும் இசையொலிகள் நிறைந்த ஆரவார விழாவாக நடைபெற்றது என்பதை எல்லாம் திருஞானசம்பந்தர் பதிவு செய்துள்ளார்.

    4. "மாளாத காதல் நோயாளன் போல்" என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
            மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும், அத்துன்பம் தனக்கு நன்மையைத் தரும் என்று உணர்ந்து, மருத்துவர்மீது அன்பு காட்டுவதுபோல,

            வித்துவக்கோட்டில் இருக்கும் அன்னையே! நீ எனக்கு விளையாட்டாய் நீங்காத துன்பத்தைத் தந்தாலும், அடியவனாகிய நான் எப்பொழுதும் உன் அருளையே எதிர்ப்பார்த்து வாழ்கிறேன்.

    ஈ) நெடு வினா

    1. திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் கருத்தைக் கட்டுரையாக்குக.

    முன்னுரை:

            திரைப்படத்துறை என்பது பல்லாயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலாக இருப்பதோடு, கலைகள் பலவற்றின் சங்கமமாகவும் திகழ்கின்றது. ஒரு திரைப்படம் உருவாக ஆடல், பாடல், இசை பல கலைகள் அறிந்தவர்கள், பல்வேறு தொழிலாளர்கள் எனப் பலர் தேவை. இவர்களின் கூட்டு முயற்சியால் உருவாகும் திரைப்படத்தால், மிக அடிமட்டத் திரைப்படத் தொழிலாளிமுதல் இயக்குநர், கதாநாயகன், கதாநாயகி உட்பட, அத்திரைப்படத்தில் செயலாற்றிய பல்லாயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலாகவும் திரைப்படத்துறை விளங்குகின்றது.

    மிகப்பெரிய தொழில்:
            திரைப்படம் தயாரிப்பது என்பது பெரும்பண முதலீட்டில் செய்யப்படுகின்ற மிகப்பெரிய தொழிலாகும். கதை உருவாக்கம், நடிகர்கள் தேர்வு, உரையாடல் எழுதுதல், பாடல் எழுதுதல், பாடலுக்கு இசை அமைத்தல், படம் எடுப்பதற்குரிய இடங்களைத் தேர்வு செய்தல், ஒலி, ஒளிப்பதிவுகள் செய்தல், பின்னணி இசை சேர்த்தல், படத்தொகுப்பினை மேற்கொள்ளுதல் போன்ற இன்றியமையாப் பணிகளைச் செய்வதற்குப் பலநூறு நபர்களைத் தேர்வு செய்து, பல்வேறு பணிகளை அவரவருக்குப் பிரித்துக் கொடுத்துச் செய்ய வைத்தல் அவசியம். அவர்களுக்கு நாள்தோறும் உணவும் ஊதியமும் தருதல் வேண்டும்.

    ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழில்:
            இத்தனை எண்ணற்ற வேலைகளையும் செய்யவேண்டும் என்றால், பல்லாயிரம் பேர் இத்தொழிலில் ஆர்வத்துடனும் கவனத்துடனும் கடமை உணர்வுடனும் ஈடுபட வேண்டும். ஒரு திரைப்படத்தின் வெற்றியை நம்பியே அத்திரைப்படத்தில் பணியாற்றும் அத்தனை திரைப்படத் தொழிலாளர்களின் குடும்பமும் உள்ளதால், திரைப்படத்துறை என்பது பல்லாயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலாகும் என்பதில் ஐயமில்லை.

    திரைப்படத்துறை கலைகளின் சங்கமம்:
            திரைப்படத்தில் நடிப்பு, வசனம், இசை அமைத்தல், சண்டை, குரல் கொடுத்துப் பாடல், ஆடல் எனப் பல கலைகள் சங்கமமாகின்றன. திரைப்படத் துறையால் ஆடல், பாடல், நடிப்பு, சண்டை ஆகிய பல கலைகளில் புதுப்புது உத்திகளைக் கையாளுவதனால், அவை புத்தாக்கம் பெறுகின்றன. இவற்றைத் திரைத்துறையில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என்றால், இக்கலைகளில் சிறந்த பயிற்சி பெற்ற திறமையான கலைஞர்கள் வேண்டும். சில நேரங்களில் பெரிய பெரிய அரங்குகளைச் செயற்கை முறையில் அமைக்க வேண்டியது இருக்கும். அவ்வரங்குகளில் நேர்த்தியாகப் படப்பிடிப்பை மேற்கொள்வர்.

    முடிவுரை:
            இவ்வகையில் உற்று நோக்கிச் சிந்தித்தால், திரைப்படத்துறையில் எண்ணற்ற தொழில் அறிந்த நுட்பமான கலைஞர்கள் இணைந்து பணியாற்றுவதை அறியலாம். கலைகள் பலவற்றை வளர்க்கும் தொழிற் கூடமாகவும் திரைப்படத் தொழில் இருக்கிறது. எண்ணற்ற குடும்பங்களின் உயிர்வாழ்க்கைக்கும் உயர்வுக்கும் துணைபுரியும் தொழில்களில் ஒன்றாகத் திரைப்படத் தொழில் வளர்ந்து வந்து, நாடாளும் தலைவர்களையும் உருவாக்கும் தொழிலாக உள்ளது.

    2. நடிகர் திலகத்தைக் கண்ட பாலச்சந்திரனின் நினைவலைகளை நயத்துடன் புலப்படுத்துக.

    முன்னுரை:

            நவரச உணர்வுகளைத் தன் முகக் குறிப்புகளாலும் உடல் மொழிகளாலும் சிறப்பாக வெளிப்படுத்தி நடித்த மகா நடிகன் சிவாஜி கணேசன். அவரை நேரில் கண்ட பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் மனவோட்டத்தை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

    பிறவிக்கலைஞர்:
            கட்டுரை ஆசிரியர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, சிவாஜி கணேசனைச் சந்திக்க ஒருமுறை ஜான்பால், ராஜீவ்நாத் ஆகியோருடன் அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார். இதுவரை திரையில் மட்டுமே பார்த்த உருவத்தை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற ஆவல் அவர் முகத்தில் வெளிப்பட்டது. சிவாஜி நடந்து வந்த காட்சியை, "கைகள் வீசி, பார்வை இமை அசையாது, மெல்ல மெல்ல சிங்க நடை நடந்து வரும் அந்த மகாநடிகனைப் பார்த்தபொழுது, இராஜராஜசோழனைப் போலவே இருந்தது" என்று அப்படியே விவரிக்கிறார். இது நடிப்பன்று; இயல்பு. இயல்பான நடையே இத்தகைய கம்பீரமாக இருப்பதால், அவரைப் பிறவிக் கலைஞர் என்று கூறுவது பொருத்தமே என்று, பாலச்சந்திரனின் மனம் நினைத்தது.

    இளமையும் நடிப்பும்:
            இன்று, மாபெரும் நடிகனை நேரில் கண்டுவியந்தபோது, அவரது இளமையும் நடிப்பும் கண்முன் நிழலாடின. சின்னையா கணேசன், பின்னாளில் 'நடிப்பின் இமயம்', 'நடிப்புப் பல்கலைக்கழகம்' என வியந்து போற்றப்பட்டவர் தன் தந்தையைத் தனது ஒன்பதாவது வயதில்தான் முதன்முதலாகப் பார்த்திருக்கிறார். பள்ளிக்கூடம் செல்லாத கணேசன், ஐந்து வயதாகும்போதே குடும்பச் சூழ்நிலை காரணமாக, நாடகக் குழுவில் இணைந்தார் என்பதை அறிந்து பாலச்சந்திரன் சுள்ளிக்காடு வியந்தார்.

    எளிய மனிதர்:
            திரையில் பார்த்து மகிழ்ந்து வியந்த அந்த மகா நடிகரின்முன் தான் அமர்ந்திருப்பதை எண்ணி, பாலச்சந்திரன் பரவசமடைந்தார். எவ்விதப் பெருமிதமும் இல்லாமல், மிக எளிய மனிதராய் தங்களின் வருகையைக் குறித்துக் கேட்டறிந்து காத்திருந்தார். எங்களுக்காக வீரபாண்டிய கட்டபொம்மனாய் வசனம் பேசி நடித்துக் காட்டினார். கட்டபொம்மன் திரைப்படத்தினும் நாடகத்தில் நடித்ததே திருப்தியளித்தது என்று சிவாஜி கூறியதை மனத்தில் பதித்தார். இவையெல்லாம் பாலச்சந்திரன் நினைத்துப் பார்க்க இயலாத உண்மைகளாய் இருந்தன.

    பாராட்டும் பண்பாளர்:
            சிவாஜி கணேசன் மாபெரும் நடிகர்; பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர்; உலகின் மிகப்பெரிய மனிதர்களிடம் தொடர்பில் இருக்கும் நடிப்பு ஆளுமை! பாலச்சந்திரன் எழுதிய நாடகத்தின் வசனத்தைப் பேசிக் காட்டிய இராவணனின் பாத்திரத்தை அவர் கைதட்டிப் பாராட்டியது பாலச்சந்திரனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. “உன் குரல் நன்றாக இருக்கிறது” என்று நடிப்பின் சிகரம் பாராட்டியதைப் பாலச்சந்திரன் பெரும்பேறாகக் கருதினார்.

    விருந்தோம்பல் பண்பு:
            அவர் தங்களோடு இரவு விருந்து உண்டதையும், வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்ததையும் எண்ணிப் பாலச்சந்திரன் அகம் மகிழ்ந்தார். எவ்வளவு பெரிய ஒரு நடிப்பு ஆளுமை, எளிமையாக இனிமையாகத் தன்னுடன் பேசியதைப் பாலச்சந்திரன் மிகப்பெரும் பேறாகக் கருதினார். சிவாஜியின் இல்லத்தை விட்டுப் பிரியும்போது, கேரளத்தின் முக்கிய நகரத் தெருக்களில் அவருக்காகக் குரல் விற்றுப் பிழைத்த சிறுவயது பையன் பாலச்சந்திரன் கள்ளிக்காடுவின் நினைவில் வந்து சென்றான்.

    முடிவுரை:
            “என்னைப்போல் சிவாஜி நடிப்பார். ஆனால், என்னால்தான் சிவாஜிபோல் நடிக்க முடியாது" என, மார்லன் பிராண்டோ என்ற ஹாலிவுட் நடிகரால் புகழப்பட்ட நடிப்புலகச் சக்கரவர்த்தியைக் கண்டு திரும்பிய அனுபவத்தைப் பாலச்சந்திரனால் அவ்வளவு எளிதாக மறக்க இயலவில்லை.

    3. சென்னையில் உள்ள மயிலாப்பூர், கந்தகோட்டப் பகுதிகள் செய்யுளில் எவ்விதம் காட்சிப்படுத்தப் படுகின்றன?

    மயிலாப்பூர்:
            மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் நாகரிகத்தின் வெளிப்பாடு, கோவில் திருவிழாக்கள். கோவில், ஓர் ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்று. புகழைப் பறைசாற்றும் எழுச்சியே திருவிழாக்கள். அத்தகைய விழாக்கள் நிறைந்த ஊர் திருமயிலை.

            இளம்பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர் திருமயிலை. அங்கு எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும். மயிலைக் கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழா, விமரிசையாக நடைபெறுமென, மயிலாப்பூர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    கந்த கோட்டம்:
            ஆன்மநேய ஒருமைப்பாட்டையும், சமய ஒருமைப்பாட்டையும், ஒளிவழிபாட்டையும் முன்வைத்துச் சீர்திருத்தச் சிந்தனையை உருவாக்கி, உண்மை நெறியை வளர்த்தவர் வள்ளலார்.

            வள்ளலாரின் சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்தது கந்தகோட்டம். இராமலிங்க அடிகள், சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் அருளை வேண்டி, தெய்வமணிமாலை என்னும் பாமாலையைப் பாடியுள்ளார். அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளி யிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத்தோற்றத்தை உடைய தூய மாணிக்கமணியே! அம்மணிகளுள் அருள் நிறைந்த சைவமணியே! ஒரு நெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய மலர்போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்.

            உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாகப் பேசும் வஞ்சகர்தம் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும். என்றும் உன்னை மறவாதிருக்க வேண்டும். ஆறுமுகங்களை உடைய தெய்வமாகிய மணியே, இத்தகைய சிறப்புகளை நீ எனக்கு அருள்வாயாக என. இராமலிங்க அடிகள் கந்தகோட்டத்து இறைவனிடம் வேண்டுவது, மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    II. மொழியை ஆள்வோம்

    அ) தமிழாக்கம் தருக.

            Periyar was not only a great social revolutionary, he was something more than that. He is known as a great champion of the underprivileged; even in this sphere he was much more than that. His sphere of activity was very wide and when he took up any issue he went deep into it, understood all the aspects of it and did not rest until he had found a permanent solution to it. Communal differences in our society were deep rooted and appeared to be permanent features of our society until Periyar came on the scene.

            பெரியார் ஒரு சமூகப் புரட்சிப் போராளி மட்டும் அல்லர்; அவர் அதற்கும் மேற்பட்டவர். அவர் சமுதாயத்தில் நசுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடிய வீரர்; வெற்றி வீரனுக்கும் மேலானவர். அவர்களுக்காக மிகவும் ஈடுபாட்டுடன் களத்தில் இறங்கினார். இதில் அவரின் ஆதிக்கப் பார்வை விரிவாய் இருந்தது. எப்பொழுதெல்லாம் பிரச்சினை எழுகிறதோ, அப்பொழுதெல்லாம் அதன் அடிஆழம்வரை சென்று அதனைப் புரிந்துகொண்டு, ஓய்வில்லாமல் உழைத்து அதற்கான நிரந்தரத் தீர்வினை மேற்கொள்ள முயல்வார். நம் சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றிய சாதி சார்ந்த வேறுபாடுகளை, நிரந்தரத் தொல்லையாகாமல், பெரியார் களமிறங்கி நிரந்தரமாகத் தடுக்க முயற்சி மேற்கொண்டார். சமூகத்தில் இவ்வாறான மாற்றங்களுக்கு இவரே காரணம்.

    ஆ) இலக்கிய நயம் பாராட்டுக.

    பிறப்பினால் எவர்க்கும் உலகில்
            பெருமை வாராதப்பா!
    சிறப்பு வேண்டுமெனில் - நல்ல
            செய்கை வேண்டுமப்பா!
    நன்மை செய்பவரே உலகம்
            நாடும் மேற்குலத்தார் !
    தின்மை செய்பவரே - அண்டித்
            தீண்ட ஒண்ணாதார்.
                            - கவிமணி தேசிக விநாயகம்

    ஆசிரியர் குறிப்பு: 
        புகழ்பெற்ற கவிஞரான, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, குழந்தைப் பாடல்கள், சமூகப் பாடல்கள், பக்திப் பாடல்கள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயலாற்றியவர். அவரது “பிறப்பினால் எவர்க்கும்..." எனத் தொடங்கும் பாடலில் அமைந்துள்ள நயங்களை இங்கு ஆராய்வோம்.

    மையக்கருத்து:
        பிறப்பினால் பெருமை வருவதில்லை; செய்யும் சிறந்த செயல்களே ஒருவருக்குப் பெருமை சேர்க்கும் என்பது இப்பாடலின் மையக் கருத்தாகும்.

    எதுகை:
        அடிகளிலோ சீர்களிலோ முதல் எழுத்து மாத்திரை அளவு ஒத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகை.
    அடிஎதுகை
    பிறப்பினால், சிறப்பு

    மோனை: 

        அடிகளிலோ சீர்களிலோ முதலெழுத்து ஒன்றி வருவது மோனை.
    சீர்மோனை
    பிறப்பினால், பெருமை, சிறப்பு, செய்கை
    நன்மை, நாடும், தின்மை, தீண்ட

    இயைபு: 
        செய்யுள் அடிகளின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ ஒன்றிவருவது இயைபு.
    அடி இயைபு:
    வாராதப்பா, வேண்டுமப்பா | குலத்தார், ஒண்ணாதார்

    முரண்:
        செய்யுள் அடிகளில் அமைந்த சொல்லோ பொருளோ முரண்பட்டு வருவது முரண்.
    நன்மை × தின்மை 

    சந்தம்: 
        இசையுடன் படும் ஓசை நயம் அமைந்த பாடலைச் சந்த நயமுடைய பாடல் என்பர். இப்பாடல், 'சிந்துப்பா' என்னும் பாவகையில் அமைந்துள்ளமையால், பாடி மகிழ்வதற்கேற்ற சந்த நயத்தைப் பெற்றுள்ளது.

    சுவை: 
        பாடலில் 'எச்செயல் பெருமை சேர்க்கும்' என்னும் கருத்தைக் காட்சிப்படுத்தி, தீமை செய்வாரை வெகுண்டு உரைப்பதால், இப்பாடல் 'வெகுளிச்சுவை'யை வெளிப்படுத்துகிறது எனலாம்.

        எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம், சுவை என்னும் பல நயங்களைத் தன்னகத்தே கொண்ட கவிமணியின் "பிறப்பினால் எவர்க்கும்..." எனத் தொடங்கும் பாடல், படிப்போரைத் தெளிவு பெறச் செய்கிறது.

    இ) கீழ்க்காணும் தொடர்களில் அடைப்புக்குள் உள்ள பெயர்ச்சொல்லைத் தொடர்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுக.

    எ - கா : கபிலன் திறமையானவர் என்று, _________ (குமரன்) தெரியும். 
    கபிலன் திறமையானவர் என்று, குமரனுக்குத் தெரியும்.

    1. நேற்று முதல் _________ (அணை) நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    விடைகுறிப்பு: 
    நேற்று முதல் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    2. உங்களுக்கு _________ (யார்) நன்மை என நினைக்கிறீர்கள்?
    விடைகுறிப்பு: 

    உங்களுக்கு யாரால் நன்மை என நினைக்கிறீர்கள்?

    3. முருகன் _________ (வேகம்) சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை.
    விடைகுறிப்பு: 
    முருகன் வேகமாகச் சென்றும், பேருந்தைப் பிடிக்க இயலவில்லை.

    4. நம்முடைய _________ (தேவை) அளவு குறைந்தால், மகிழ்ச்சி பெருகும்.
    விடைகுறிப்பு: 
    நம்முடைய தேவையின் அளவு குறைந்தால், மகிழ்ச்சி பெருகும்.

    ஈ) பொருள் வேறுபாடு அறிந்து தொடர்அமைக்க.

    எ கா : களம், கலம், வளம், வலம்.
    'களம்' என்பது, போர்க்களமும் நெற்களமும் ஆகும்.
    விடைகுறிப்பு: 

    போர்க்களத்தில் புண்பட்ட வீரர்களுக்கு கலத்தில் நீர் தரப்பட்டது.
    'கலம்' என்பது, பாத்திரத்தையும் குறிக்கும்; முகத்தலளவையும் குறிக்கும்.
    விடைகுறிப்பு: 
    ஆற்றின் வலப்புறம் உள்ள வயல்கள், நீர்வளத்தால் செழித்திருந்தன.
    தஞ்சை வயல் 'வளம்' கொண்டது; முழுமதி நாளில் மலையை 'வலம்' வருவர்.

    1. புல் -புள் 
    புல் - புற்கள்; புள் பறவை.
    விடைகுறிப்பு: 

    புல் தரையில் நிறைய புட்கள் அமர்ந்திருந்தன.

    2. உழை - உளை 
    உழை - உழைப்பு; உளை சேறு
    விடைகுறிப்பு: 

    உளையில் இறங்கி, உழவர் உழைக்கின்றனர்.

    3. கான் - காண் 
    கான் - காடு; காண் - பார்
    விடைகுறிப்பு: 

    கானில் உலவும் விலங்குகளைக் காணச் சென்றோம்.

    4. ஊண் - ஊன் 
    ஊண் - உணவு; ஊன் - இறைச்சி
    விடைகுறிப்பு: 

    ஊனை ஊணாகக் கொண்டால், உடல்நலத்திற்குக் கேடு தரும்.

    5. தின்மை - திண்மை 
    தின்மை - தீமை; திண்மை - வலிமை
    விடைகுறிப்பு: 

    திண்மையுடையோர், மெலியாருக்குத் தின்மை செய்யக்கூடாது.

    உ) பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.

    எ-கா: 
    இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. நீயும் புரிஞ்சிக்கோ.
    விடைகுறிப்பு:

    இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள்.

    1. நிலத்தக் கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும்.
    விடைகுறிப்பு: 

    நிலத்தைக் கிளர வேண்டுமடா! அப்பொழுதுதான் வயிறு நிறையும்.

    2. அண்ணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதான.
    விடைகுறிப்பு: 
    அன்றைக்கு அவனுக்குப் பணம் கொடுத்து, உதவியிருக்க வேண்டியதுதானே?

    3. வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு.
    விடைகுறிப்பு: 

    வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை, அப்பா எங்கே அழைத்துச் சென்றார்?

    4. புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது.
    விடைகுறிப்பு: 

    பிள்ளைக்கு உடம்பு சரி இல்லை; மூன்று நாளாய்ச் சிரமப்படுகிறது.

    5. ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல்.
    விடைகுறிப்பு: 

    இரவுக்குச் சித்தப்பாவைக் காவலுக்குப் போகச் சொல்.


    உ) கதையைப் படித்துப் பொருளுணர்ந்து நிகழ்வை உரையாடலாக மாற்றுக.

        “எனக்குச் சில்க் சட்டை இருக்கே! உனக்கு இருக்கா!" என்று கெட்டிக்காரத்தனமாகக் கேட்டான் இராமசாமி. செல்லையா பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்; தம்பையா ஆகாயத்தைப் பார்த்து யோசனை செய்தான்; மங்கம்மாள் மூக்கின்மேல் ஆள்காட்டி விரலை வைத்துக்கொண்டும், கண்ணை இலேசாக மூடிக்கொண்டும் யோசனை செய்தாள். அந்த மூவரும் இராமசாமியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று, ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் மற்ற பிள்ளைகள். அன்று பள்ளிக்கூடத்திலிருக்கும்போது இராமசாமிக்கும் செல்லையாவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது. இராமசாமி தன் 'ஐந்தாம் வகுப்பிற்குரிய இந்தியதேச சரித்திர'ப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டான். செல்லையா அந்த வருஷம் இந்தியதேச சரித்திரம் வாங்கவில்லை; அதனால் தன்னிடமுள்ள ஒரு சிவிக்ஸ் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டான். இருவரும் 'படப்போட்டி'யை ஆரம்பித்து விட்டார்கள்.
                                                                - 'ராஜா வந்திருக்கிறார்', கு. அழகிரிசாமி
     
    உரையாடல் :
    இராமசாமி: ஐந்தாம் வகுப்பிற்குரிய இந்திய தேச சரித்திரப் புத்தகத்தை எடுத்து நான் வைக்கிறேன். செல்லையா நீயும் உன் புத்தகத்தை எடுத்து வை.
    செல்லையா: இந்த வருடம் இந்திய தேச சரித்திரம் புத்தகத்தை நான் இன்னும் வாங்க வில்லையே!

    இராமசாமி: பரவாயில்லை, வேறு ஏதாவதொரு புத்தகத்தை எடுத்து வை. நாம் 'படப்போட்டி" வைத்து விளையாடலாம்.
    செல்லையா: என்னுடைய குடிமையியல் புத்தகத்தை எடுத்து வைக்கிறேன். 
    இராமசாமி: எடுத்து வைத்ததும், நாம் விளையாட்டை ஆரம்பிக்கலாமா?
    செல்லையா: ஆம், ஆரம்பிக்கலாமே!
    இராமசாமி: எனக்குப் பட்டுச்சட்டைப் படம் வந்து இருக்கே! உனக்கு இருக்கா ?
    செல்லையா: (பதில் சொல்லாமல் விழித்துக் கொண்டிருக்கிறான்)
    தம்பையா: (ஆகாயத்தைப் பார்த்து யோசனை செய்வதுபோல் இருந்தான்.)
    மங்கம்மாள்: (மூக்கின்மீது ஆள்காட்டி விரலை வைத்துக்கொண்டும், கண்ணை மூடிக் கொண்டும் யோசனை செய்தாள்.
    மற்ற பிள்ளைகள்: (இராமசாமியின் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று ஆவலோடு கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.)
     

    III. மொழியோடு விளையாடு

    அ) எண்ணங்களை எழுத்தாக்குக.

    ஆடி காட்டும் புறஅழகு 
    எல்லாம் அழகல்ல!
    பெண்ணுக்கு உள்ளம் 
    காட்டும் அக அழகே அழகு! 
    புறத்தைத் தூய்மையாக்கத் 
    தண்ணீர் போதும் 
    அகத்தைத் தூய்மையாக்க 
    வாய்மை வேண்டுமம்மா! 
    மெய்ப்பொருள் அறிந்து 
    பொய்ப்பொருள் தவிர்!

    ஆ) ஈற்றடி எழுதித் துளிப்பாவை நிறைவு செய்க.

    எ கா : 
    பூட்டிய
    வீட்டிலும் 
    பூத்துச் சிரிக்கிறது
    விடைகுறிப்பு: 
    முல்லை.

    1. விழும் மரங்கள் 
    அழியும் காடு 
    விடைகுறிப்பு:
    கான்கிரீட் வீடுகள்.

    2. அப்படியென்ன 
    சொல்லியது காற்று 
    குதித்தாடுகிறது மேகம் 
    விடைகுறிப்பு:
    வானம்!

    3. பூத்த 
    மலரொன்று 
    பறக்கிறது 
    விடைகுறிப்பு:
    காற்றில்!

    4. வானம் 
    அழுகிறது 
    பூமி சிரிக்கிறது 
    விடைகுறிப்பு:
    மழை.

    இ) கருதுப்படதைப் புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக.

     
     பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க இலக்கிய நூல்கள் ஆகும். எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை ஆகிய ஐந்து நூல்களும் அகப்பொருள் பற்றிய நூல்கள். புறநானூறும், பதிற்றுப்பத்தும் புறப்பொருள் சார்ந்த நூல்கள். பரிபாடல், அகம், புறம் என்னும் இரண்டு பொருள்களையும் விவரிக்கும் நூல்களாகும்.

        பத்துப்பாட்டு நூல்களுள் குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை ஆகிய நான்கு நூல்களும் அகப்பொருள் பற்றிய நூல்கள். மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகிய ஆறு நூல்களும் புறப்பொருள் பற்றிய நூல்கள்.

    ஈ) கீழ்க்காணும் பகுதியைப் படித்துப் பார்த்து, பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து தமிழ்ப்படுத்துக. 

        சர்க்கார் கொடுக்கும் சம்பளம் ஜீவனத்துக்குப் போதுமா? அதற்குள் ஜீவனம் நடத்த முடியுமா? என்று, அவர் சிந்தித்தது கிடையாது; சிந்திக்க முயன்றதும் கிடையாது. எல்லாம் மாயை; உள்ளூர நிற்கும் ஆத்மா மாசுபடவில்லை. தான் வேறு இந்த மாயை வேறு. தான் இந்தப் பிரபஞ்சத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஓர் அம்சம் என்று, திடமாக நம்பியிருந்தார். ஏனென்றால், அவரது ஆத்ம விசாரத்தைச் சோதனை போட்டுப் பார்க்க, இதுவரை தெய்வத்துக்கோ மனுஷனுக்கோ அவகாசம் கிடைத்ததில்லை. மனுஷ வர்க்கம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையை ஸ்புடம் போட்டுப் பார்ப்பது போலத் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்தது.

        அரசு கொடுக்கும் ஊதியம் வாழ்க்கைக்குப் போதுமா? அதற்குள் வாழ்க்கை நடத்த முடியுமா? என்று அவர் சிந்தித்தது கிடையாது, சிந்திக்க முயன்றதும் கிடையாது. எல்லாம் மாயை; உள்ளூர நிற்கும் ஆன்மா மாசுபடவில்லை. தான் வேறு இந்த மாயை வேறு. தான் இந்த அண்டத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு கூறு என்று, உறுதியாக நம்பியிருந்தார். ஏனென்றால், அவரது ஆன்மத் தேடலைச் சோதனை போட்டுப் பார்க்க, இதுவரை தெய்வத்துக்கோ மனிதனுக்கோ வாய்ப்புக் கிடைத்ததில்லை. மனித இனம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையைப் புடம் போட்டுப் பார்ப்பது போலத் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்தது.

    பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள்:
    சர்க்கார் - அரசாங்கம்
    சம்பளம் - ஊதியம்
    ஜீவனத்துக்கு - வாழ்க்கைக்கு
    ஜீவனம் - வாழ்வு
    மாயை - பொய்த்தோற்றம்
    பிரபஞ்சத்தை - பெருவெளியை
    ஆத்ம விசாரத்தை - உயிர் பற்றிய கவலையை
    மனுஷனுக்கோ - மனிதனுக்கோ
    அவகாசம் - நேரம்
    மனுஷ வர்க்கம் - மனித இனம்
    ஸ்புடம் (போட்டு) -நெருப்பில் (இட்டு)
    அம்சம் - பன்முகமாக உள்ள திட்டம் (தன்மை)
    ஆத்மா - உயிர் (ஆன்மா, உடலில் இருந்து வேறுபட்ட பொருள்)

    உ) செய்து கற்போம். 

    நீங்கள் அறிந்த ஊர்களின் பெயர்க்காரணங்களைத் தொகுத்து ஒப்படைவு உருவாக்குக.
     

    IV. நிற்க அதற்குத் தக.

    [ஆளுமைத்திறன் என்பது. ஒருவரது ஒழுங்கமைந்த இயங்கியல் நடத்தை, உணர்வு, சிந்தனை ஆகியவற்றைக் குறிக்கிறது. தன்னம்பிக்கை, நேர்மறைச் சிந்தனைகள், அடிப்படை ஒழுக்கம், உடற்பயிற்சி ஆகிய அனைத்துமே, ஆளுமைப் பண்புகளுள் அடங்கும்]

    இமயா, இருசக்கர வாகனம் ஓட்டப் பழகுகிறாள். ஓட்டுகையில் இடையில் தடுமாறிக் கீழே விழுகிறாள். கற்றுக்கொடுக்கும் அவளுடைய அண்ணன், 'உன்னால் இருசக்கர வாகனம் ஓட்ட இயலாது' என்கிறான். நீங்கள் இமயாவாக இருந்தால் என்ன சொல்வீர்கள்?

            நான் இமயாவாக இருந்தால், தொடர்ந்து முயற்சி செய்து, இருசக்கர வாகனத்தை ஒட்டப் பயிற்சி செய்வேன். முயன்றால் முடியாதது உலகில் எதுவும் இல்லை. பெண்பிள்ளை என்றால், முயற்சி செய்ய முடியாதா? நான் நேர்கொண்ட பார்வையோடு செயல்படுவேன். 'வீட்டுக்குள் பெண்ணைப் பூட்டிவைத்த விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்' என்று, பாரதியார் சொன்னதைச் செயல்படுத்தி, என் அண்ணனை வியக்க வைப்பேன்.

    பள்ளி ஆண்டுவிழாவிற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினருக்கு நன்றியுரை நிகழ்த்த ஆசிரியர் அழைக்கின்றார். அந்நிலையில் நீவிர் என்ன செய்வீர்?

            பள்ளி ஆண்டு விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் முதற்கண் என் அன்புகலந்த பணிவான வணக்கம். எங்கள் பள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராக எங்கள் அழைப்பை ஏற்றுப் பல பணிகளுக்கு இடையிலும் சிரமம் பாராது வந்து கலந்துகொண்டு, சிறப்புரையாற்றி எங்களை விழிப்படையச் செய்த சிறப்பு விருந்தினருக்கு எம் நன்றியை, அனைவர் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவுக்குரிய ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். இந்த விழாவை அமைதியாக நடத்த ஒத்துழைப்புத் தந்த அனைத்து மாணவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

    அ) படிப்போம், பயன்ப்படுத்துவோம்!

    Artist - கவின்கலைஞர்
    Animation - அசைவூட்டப் படமாக்கம்
    Newsreel - செய்திப்படம்
    Cinematography - ஒளிப்பதிவு
    Sound effect - ஒலிவிளைவு
    Multiplex Complex - ஒருங்கிணைந்த வளாகம்

    ஆ) அறிவை விரிவு செய்.

    எனது சுயசரிதை -சிவாஜி கணேசன்
    உலகத் திரைப்பட வரலாறு I, II, III - அஜயன் பாலா
    காப்பியத்தமிழ் - இரா. காசிராசன்
    பேசும் படம், உலக சினிமா I, II - செழியன்
    சினிமா இரசனை - அம்ஷன்குமார்
    இராமலிங்க அடிகள் வரலாறு - ஊரன் அடிகள்


     
     
     
     

     
     
     
     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive