11th Tamil - Book Back Answers - Unit 6 - Guides

    

 


    Plus One / 11th Tamil - Book Back Answers - Unit 6 - Download

    Tamil Nadu Board 11th Standard Tamil - Unit 6: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 6 – from the Tamil Nadu State Board 11th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 6 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 11 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 6

    I. நம்மை அளப்போம்

    அ) பலவுள் தெரிக.

    1. 'ஜனப் பிரளயம்' என்னும் வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?
    அ) மக்கள் அலை
    ஆ) உயிர் அலை
    இ) மக்கள் வெள்ளம்
    ஈ) மக்கள் அவை
    விடை : 

    இ) மக்கள் வெள்ளம்

    2. அதிசய மலரின் புன்னகையை உணர்த்துவது
    அ) நம்பிக்கை
    ஆ) பெருமிதம்
    இ) புகழ்
    ஈ) அச்சம்
    விடை : 
    அ) நம்பிக்கை

    3. “அழகும் அறிவும் இளமையும் வாய்த்தவன்" - யார், யாரிடம் கூறியது?
    அ) அமைச்சர் கவிஞரிடம்
    இ) அமைச்சர் மன்னனிடம்
    இ) கூற்று சரி; காரணம் தவறு
    ஆ) மன்னர் அமைச்சரிடம்
    விடை : 

    ஈ) மன்னர் அமுதவல்லியிடம்

    4. கூற்று : மாணவர்கள் பள்ளியில் பயில்கின்றபோதே கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
    காரணம் இத்திறன்கள் எதிர்காலத்தில் மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும்.
    அ) கூற்று தவறு; காரணம் சரி
    ஆ) கூற்று சரி; காரணம் சரி
    இ) சொற்களுக்கிடையே இடைவெளி தருக
    ஈ) கூற்று தவறு; காரணம் தவறு
    விடை : 
    ஆ) கூற்று சரி; காரணம் சரி

    5. பிழைத் திருத்தத்தில் Dt இக்குறியீடு உணர்த்தும் பொருள்
    அ) ஒற்றை மேற்கோள் குறியிடுக
    ஆ)தடித்த  இடத்தில் மாற்றுக
    இ)சொர்களுகிடையே இடைவெளித் தருக
    ஈ) சொல்லையோ எழுத்தையோ நீக்குக
    விடை: 

    ஈ) சொல்லையோ எழுத்தையோ நீக்குக




    ஆ) குறு வினா

    1. 'நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்' என்னும் உவமையை ஜீவானந்தம் பேச்சுடன் ஒப்பிடுக.
            'வாண வேடிக்கைக்காரன் நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல்' என்னும் உவமை ஜீவானந்தத்தின் மேடைப்பேச்சின் சிறப்பை விளக்குகிறது. சில கருத்துகளை விரிவாகக் கூறிப் புரிய வைத்தால் போதும் என்பதே ஜீவாவின் எண்ணம்.
    எனவே, இரண்டு கைப்பிடி விசயத்துடன் மேடை ஏறுவார். வெடிமருந்துக்கு நெருப்பு வைத்ததும், பச்சை, மஞ்சள், சிவப்பு எனக் குடைகுடையாய் வண்ணம் உதிர்வதுபோல, மாலை மாலையாய் இறங்கி வரும் கருத்து வண்ணஜாலம் அறிந்தவர் ஜீவா என்பதைத் தெளிவுபடுத்த, இவ்வுவமை கூறப்பட்டுள்ளது.
     
    2. உழைப்பாளர்களின் தோள் வலிமையால் விளைந்தன யாவை?
            சிற்றூர், வயல், வரப்பு, நெல் முதலான விவசாய உற்பத்தி, அதில் கிடைத்த பொருட்செல்வம், கனிமவளம், கருவிகள், பொன், முத்து, மாணிக்கம் ஆகியவை உழைப்பாளர்களின் தோள் வலிமையால் விளைந்தனவாகும்.
     
    3. அலைகடல், புதுக்கியவர் -இலக்கணக்குறிப்புத் தருக.
    அலைகடல் - வினைத்தொகை
    புதுக்கியவர் - வினையாலணையும் பெயர்.
     
    4. "எங்கிருந்தோ வருகிறது
    வண்ணத்துப் பூச்சியொன்று
    பறவைகளும் வரக் கூடும் நாளை”இவ்வரிகள் மூலம் தமிழ்நதி கூறும் செய்திகள் யாவை?
            போருக்குப்பின் பிறந்த குழந்தையாகப் பொட்டல்வெளி. அங்கே ஏதும் நம்பிக்கை இல்லை. நெடுநாட்களுக்குப்பின் நடந்த அதிசயம். எப்படியோ ஒட்டிவந்த விதை முளைத்து பசுமை பூத்த மலரில் தேன் உண்ண வண்ணத்துப்பூச்சி வருகிறது. அந்தப் பூச்சியின் வருகைக்குக் காரணமான பூ தரும் நம்பிக்கை இனி மழை பொழியும், காடு பெருகும் என்பது. அந்த அதிசய மலரின் புன்னகை பேரூழி கடந்து பிழைத்திருக்கும் மனிதரிடையே பரவிச் செல்வதான செய்தியைத் தமிழ்நதியின் கவிதை உணர்த்துகிறது.
     

    இ) சிறு வினா

    1. ஜீவாவின் பேச்சுநடை குறித்துச் சுந்தரராமசாமி கூறுவன யாவை?
            ஜீவாவின் பேச்சுக்கலை அவர் பெற்ற வரம் என்றுதான் சொல்ல வேண்டும். அத்தோடு அவர் பேசுகையில் வெளிப்படும் உத்திகளும் பேச்சை அமைக்கும் அழகும் வெகு நூதனமாகவும் நளினமாகவும் இருக்கும்.
            
             பேச்சுக்கலையை விளக்கும் பாடப்புத்தகங்கள், எத்தனையோ விதிகள் கூறும். ஜீவா அவற்றை ஒருபோதும் பின்பற்றியதில்லை. அவருடைய பாணி இரவல்பாணி அன்று; கற்று அறிந்ததும் அன்று.
            செய்திகளைக் குறித்து மக்களைக் குழப்பாமல் ஒரு சில கருத்துகளை விரிவாகச் சொல்லிப் புரிய வைத்துவிட்டால் போதும் என்பதே ஜீவாவின் எண்ணம். மக்களின் தரத்தையும் அனுபவ அறிவையும் பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் நன்றாக அறிந்து பேசியவர் என்று சுந்தரராமசாமி தம் கருத்துகளை நயம்படக் கூறியுள்ளார்.
     
    2. “உயர்தமிழை உயிரென்று போற்றுமின்கள்” - இடம்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
    இடம்: பாரதிதாசனார் இயற்றிய 'புரட்சிக்கவி' என்னும் சிற்றிலக்கியத்தில், அரசன் மகளின் காதலனும் கவிஞனுமான உதாரன், மரண தண்டனைத் தீர்ப்பைப் பெற்றான். அதனை நிறைவேற்றுவதற்குமுன் தலைப்பாகை அதிகாரி சில “பேச்சுப் பேசிடுக" என அனுமதி வழங்கியவுடன் உதாரன் பேசியதே இது.
     
    பொருள்: உலகில் உயர்தமிழை, நம் உயிர் போன்று போற்றுவீர்களாக.
     
    விளக்கம்: "தமிழ் அறிந்ததால் வேந்தன் என்னை அழைத்தான். தமிழ்க்கவி என்றே அவளும் என்னைக் காதலித்தாள். அமிழ்து என்று சொல்லப்படும் தமிழ், என் ஆவி அழிவதற்குக் காரணமாக இருந்தது என்று சமுதாயம் நினைத்து விடுமோ! ஐயகோ! தாய்மொழிக்குப் பழிவந்தால் எவ்வாறு பொறுப்பது. மக்களே உங்களை வேண்டிக் கேட்கிறேன். மாசில்லாத உயர்ந்த தமிழை உயிராகப் போற்றுங்கள்" என்று தன் இறுதிப் பேச்சைப் பேசுகிறான்.
     
    3.  பெருங்காடு, உழுதுழுது - பிரித்துப் புணர்ச்சிவிதி எழுதுக.
    அ) பெருங்காடு பெருமை + காடு
    'ஈறுபோதல்' என்னும் விதிப்படி - 'பெரு + காடு' என ஆனது.
    'இனம் மிகல்' என்னும் விதிப்படி 'பெருங்காடு'எனப் புணர்ந்தது.
     
    ஆ) உழுதுழுது உழுது + உழுது
    "உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்" என்னும் விதிப்படி - 'உழுத் + உழுது' என்றானது. “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்னும் விதிப்படி 'உழுதுழுது' எனப் புணர்ந்தது.

    4. அதிசய மலரின் பூச்செடி எவ்வாறு முளைத்ததாகத் தமிழ்நதி கூறுகிறார் ?

    • போரில் குண்டு மழை பொழிந்தது; நிலங்கள் அழிக்கப்பட்டன; மனிதர்கள் சிதறி ஒடினர்; அழிக்கப்பட்ட தாய்மண்ணில் பூ ஒன்று மலர்கிறது. அந்தப் பூவானது யாருமில்லாத நேரத்தில் அலைந்து திரிந்த யானையின் எச்சத்திலிருந்து முளைத்திருக்கலாம்.
    • பெரும்பாலானோர் அழிக்கப்பட்ட நிலையிலும் எஞ்சியிருந்த மனிதர்களின் காலணியில் ஒட்டிக் கொண்ட விதையில் இருந்து முளைத்ததாக இருக்கலாம். இவ்வாறு அதிசய மலரின் பூச்செடியாக முளைத்ததாகத் தமிழ்நதி கூறுகிறார்.

     

    ஈ) நெடு வினா

    1. சுந்தர ராமசாமியின் 'காற்றில் கலந்த பேரோசை' என்னும் தலைப்பு, ஜீவாவின் வாழ்க்கைக்கு எங்ஙனம் பொருந்தும் என்பதை விளக்குக.
     
    முன்னுரை :
            ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த சொரிமுத்து, ஆற்றில் கிளையைப் போட்டாற்போல வாழ்ந்திருக்க வேண்டியவர்தான். ஆனால் அவரோ, இயற்கையின் விதிகளை மறுத்து ஜீவா என்னும் தலைவராக எதிர்நீச்சல் போடத் துணிந்தார். சொரிமுத்துவுக்கும் தலைவர் ஜீவாவுக்கும் உள்ள இடைவெளி கொஞ்ச தூரம் அல்ல. அவ்விடைவெளி பெரிது. அது குறித்து நாம் இக்கட்டுரையில் காண்போம்.
     
    பேரோசையின் பேச்சு நடை :
            பேச்சுக்கலை, அவர் பெற்ற வரம். அத்தோடு அவர் பேசுகையில் வெளிப்படும் உத்திகளும், பேச்சை அமைக்கும் அழகும் வெகுநூதனமாகவும் நளினமாகவும் இருக்கும். ஜீவாவின் பேச்சுப்பாணி இரவல்பாணி அன்று. கற்று அறிந்ததும் அல்ல. நாட்டு மக்களின் தரத்தையும், அனுபவ அறிவையும், பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் நன்றாகத் தெரிந்து கொண்ட ஒரு மனிதன். விஷயத்தைக் கலைநோக்கோடு அணுகிக் கற்பனையும் கலந்து நாளடைவில் வெற்றிகரமாக அமைத்துக் கொண்ட பேச்சுப்பாணி அது.
    பேச்சில் வர்ண ஜாலங்கள்:
            ஒருசில கருத்துகளை விரிவாகச் சொல்லிப் புரிய வைத்துவிட்டால் போதும் என்பதே ஜீவாவின் எண்ணம். வாண வேடிக்கைக்காரன் நாழிக்குள் திணிக்கும் மருந்துபோல் இரண்டு கைப்பிடி விசயம் எடுத்துக்கொள்வார். மேடை மீதேறி அதற்கு நெருப்பு வைத்ததும் அதில் இருந்து வர்ண ஜாலங்கள் தோன்றும்.
     
    மாணவன் என்னும் எண்ணம் :
            பேச்சுக்கலை ஜீவாவின் காலடியில் விழுந்து கிடந்தது. 'நான் ஒரு பள்ளி மாணவன். படித்துக்கொண்டு இருக்கிறேன். படித்துக் கொண்டே இருப்பேன்' என்ற எண்ணம் அவர் மனத்தில் பசுமையாக இருந்தது. அவர் கரைத்துக் குடித்துவிட்ட விசயத்தைப் பற்றி ஒரு கற்றுக்குட்டி அவரிடம் பேசினாலும், அதையும் காது கொடுத்துக் கேட்பார். 'தனக்குத் தெரியாத விஷயங்கள் பிறருக்குத் தெரிந்திருக்கும்' என்ற எளிய உண்மையை அவர் மதித்தார்.
     
    'வாழ்வு என் கையில்' எனும் நம்பிக்கை:
            'என் வாழ்வு என் கைகளில்' என்று நம்பியவர் அவர். அவருடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கிறபோது, அவருடைய நம்பிக்கை பலித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கடவுளின் முன்னேற்பாடுகளை, முடிந்த மட்டும் அவர் தகர்த்து எறிந்துவிட்டார்.
     
    தொண்டர்களின் உள்ளங்களில்:
            ஜீவா என்ற தொண்டன் தமது இறுதி மூச்சு நிற்பது வரையிலும் கர்ஜித்துக் கொண்டுதான் இருந்திருப்பான் என்பதில் அவரின் தொண்டர்களுக்கு எத்தனை நம்பிக்கை. எனவேதான், 'மூச்சு நின்றுவிட்டது' என்று சொன்னபோது 'பேச்சு நின்ற போதா?' எனத் திருப்பிக் கேட்கிறார்கள் என்கிறார் சுந்தர ராமசாமி. அவர், “ஜீவா தமது அரிய சேவையால் சர்வ சாதாரண உள்ளங்களில்கூட எழுப்பி இருக்கும் பேரோசைச் சித்திரம்தான் எத்தனை ஜீவகளையுடன் காட்சி தருகிறது” என்கிறார்.
     
    முடிவுரை:
    'உழுது விதைத்தால் நல்ல அறுவடை காண வேண்டும்' என்பதில் ஜீவாவுக்கு நிர்ப்பந்தங்கள் உண்டு. இந்தத் தேசத்தில் பேச்சு அதற்குரிய பயனைத் தரவேண்டும் என்றால், அது எவ்வாறு அமைய வேண்டும் என்பதும் ஜீவாவுக்குத் தெரியும். அத்தகு ஜீவாவின் பேச்சோசை காற்றில் கலந்த பேரோசையாக ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
     
    2. பாரதிதாசன் ஒரு 'புரட்சிக்கவி' என்பதை உதாரன் பாத்திரம் வாயிலாக மெய்ப்பிக்க.
     
    முன்னுரை:
            சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் புரட்சிகரமான கருத்துகளை வெளிப்படுத்தும் பாடல்களை இயற்றியவர் பாரதிதாசன். இவருடைய படைப்புகளுள் ஒன்றாகிய 'புரட்சிக்கவி' என்பதில், உதாரன் என்னும் கதைமாந்தன் வழியாக இவர் வெளிப்படுத்தும் புரட்சிப் பாங்கினை இக்கட்டுரையில் காண்போம்.
    உருவாக்கியவர்கள் உழைப்பாளிகள்!
            கொலைக்களத்தில் உதாரன், பெரியோரையும் பெற்றோரையும், இளைஞர்களையும் விளித்துப் பேசத் தொடங்குகிறான். இந்த நாடு, நீரோடை நிலம் கிழிக்க நெடுமரங்கள் நிறைந்த காடாகிப் பெருவிலங்குகளும் பாறைகளும் பருக்கைக் கற்களும் குன்றுகளும் குகைகளும் பாம்புக் கூட்டமும் நிறைந்த இடமாக இருந்தது. இத்தகைய பாழ்ப்பட்ட நிலத்தைப் போராடி உழைத்துப் புதுமையாகப் படைத்து, நகர்களை உண்டாக்கியது யாருடைய கரங்கள்? உழைப்பாளர் கரங்களே என்று உதாரன் பேசுவது, “இந்நகரின் ஆட்சி அதிகாரம் இதனை உருவாக்கிய உழைப்பாளிகளின் கரங்களுக்கே போய்ச்சேர வேண்டும். அரசனுக்கு அதிகாரம் செலுத்தத் துளியும் உரிமையில்லை” என்ற புரட்சிகரமான கருத்தைக் கேட்போரின் மனத்தில் பதிக்குமாறு பாரதிதாசன் இப்பாத்திரத்தைப் படைத்துள்ளார்.
     
    உணவுப் பொருளை உண்டாக்கிய கைகள்:
            மேலும் உதாரன் பேசுகின்றபோது, சிறிய கிராமங்களையும் அவற்றின் வயல் வரப்புகளையும் ஆறுதேக்கிய நீரை நல்வாய்க்காலில் வகைப்படுத்தி, உழுது உழைத்தது எவரின் தோள்கள்? உழவரின் தோள்கள். பூமியில் கல்லும் மலையும் பிளந்து. கனிம வளங்களை வெட்டி வெளியில் கொண்டு வந்ததும், கருவிகள் செய்ததும் யார் கரங்கள்? உழைப்பாளர் கரங்கள்.
    நிலத்தடியில் பொன்துகளையும் கடலுக்கடியில் நன்முத்தையும் மூச்சடக்கி எடுத்துவந்து பொருளாதாரத்தை உயர்த்தியவர்கள் உழைப்பாளர்கள்! என உதாரன் பேசுகிறான்.
    எனவே, “அவர்களே ஆள்வதற்கு முழுமையான
    தகுதியை உடையவர்கள்”
    என்னும் கருத்தைப் பாரதிதாசனார் உதாரன் உரையின்மூலம் வெளிப்படுத்துகிறார்.
     
    அமுதத் தமிழைப் பழிக்காதீர்:
            வாழ்வின் இறுதியில் நிற்கின்ற போதும் உதாரன் தமிழுக்காகப் பரிந்து பேசுகிறான். தமிழ் அறிந்ததால் வேந்தன் எனைத் தன் மகளுக்குக் கவிதை கற்பிக்க அழைத்தான். என் தமிழ்க் கவிதையால் அமுதவல்லியும் என்னைக் காதலித்தாள். 'உங்களை வேண்டிக் கேட்கிறேன்; குற்றம் இல்லாத தமிழை உயர் தமிழாகக் கருதி, உயிரெனப் போற்றுங்கள்' என்று வேண்டுகிறான். தமிழை இழித்துப் பேசுவோருக்கு இக்கருத்து இடியெனத் தாக்கியிருக்கும்.
     
    மக்களாட்சியும் பொதுவுடைமையும்:
            அரசன் மகள், தன் வாழ்நாளில் குடிமக்களுக்கு மக்களாட்சி உரிமையை வழங்கிப் பொதுவுடைமைச் சமுதாயத்தை அமைக்க எண்ணி இருந்தாள். விண்ணில் வாழும் விண்மீன் மண்ணில் எரிந்து வீழ்வதுபோல் தனிமனிதன் ஆளும் கொடிய ஆட்சியும் ஒருநாள் விழும். அதற்கு நாடு உருவாக என் குருதி எல்லாம் இந்த அன்பு நாட்டில் சிந்தட்டும்' என்று, உதாரன் பேசுகிறான். இப்பேச்சின் மூலம் அரசாட்சியை வீழ்த்தி மக்களாட்சியைக் கொண்டுவர வேண்டும் எனும் பாவேந்தரின் விருப்பமும், பிறகு பொதுவுடைமைச் சமுதாயம் படைக்க வேண்டும் என்ற அவரின் தாகமும் உலகிற்குப் புரட்சிக் கனலாக வெளிப்படுகிறது.
     
    உதாரன் உரையால் மாற்றம்:
            வாளின் கீழ், உதாரன் தலை குனிந்து நின்றதும் அமுதவல்லியின் கண்களின் கண்ணீர் வெள்ளம் பெருகியது. உதாரன் உரையைக் கேட்ட மக்கள் கொடுவாளைப் பறித்தார்கள். வேந்தன் ஓடிப் போனான். 'செல்வமும் உரிமையும் எல்லாம் நாட்டில் வாழ்வோருக்கே' என்று சட்டம் இயற்றப்பட்டது. இம்மாற்றத்திற்கு உதாரனின் உணர்ச்சியும் புரட்சியும் நிறைந்த உரையே காரணமாகும்.
     
    முடிவுரை:
            இவ்வாறு புரட்சிக்கவி காவியத்தில் பாவேந்தர் பாரதிதாசன், தன்னையே உதாரன் என்னும் மாந்தனாக உருவாக்கிப் புரட்சிமிகு கருத்துகளைப் பூமியில் விதைக்கின்றார்.
     
    3. தமிழ்மொழிக்கு அயல்நாட்டவர்கள் ஆற்றிய அரும்பணிகளைத் தொகுத்துரைக்க.
            அயல் நாடுகளுடனான தமிழரின் தொடர்புபோலத் தமிழ் நாட்டுடனான அயல் நாட்டவர் தொடர்பும் தமிழ்மொழிக்கும் இலக்கியத்திற்கும் வளம் சேர்த்துள்ளது. இராபர்ட் டி நொபிலி தமிழில் பல நூல்களை எழுதினார். ஐரோப்பியரால் அச்சகங்கள் உருவாயின; உரைநடை வளர்ச்சி பெற்றது. நவீன உரைநடைவரை அடித்தளமிட்டவர்கள் தமிழ் இலக்கணம், தமிழ்ச் சுவடிகள், தமிழ் எண்கணிதம், அறிவியல் சாத்திரங்களைச் சேகரித்துப் பாதுகாத்தனர்.
            இத்தாலி நாட்டவரான வீரமாமுனிவர் தமிழ் மரபில் தேம்பாவணி காப்பியத்தையும் கலம்பகம் அம்மானை சிற்றிலக்கியங்களையும் தமிழில் எழுதியதோடு, தமிழ் எழுத்துகளில் சில சீர்திருத்தங்களையும் செய்து எளிமையாக மொழியைக் கற்க உதவினார். தமிழ்மொழியில் அகராதிமுறையை அறிமுகப்படுத்தினர் அயல்நாட்டவர். இராபர்ட் டி நொபிலி தொடங்கி வைத்த அகராதிக்கலை வீரமாமுனிவர், பெப்ரிசியசு, இராட்லர், வின்சுலோ முதலியோர் வளர்த்தெடுத்தனர்.
            ஜெர்மானியரான பார்த்தலோமியா சீகன்பால்கு பனைஒலைச் சுவடிகளிலிருந்து தமிழ்நூல்களை மீட்டு அச்சு நூல்களாக்கினர். நீதிவெண்பா, கொன்றைவேந்தன், உலகநீதி நூல்களை ஜெர்மனியில் மொழிபெயர்த்து, தமிழின் செழுமையை மேற்கு உலகிற்கு எடுத்துக்காட்டினார்.
            ஆங்கிலேயரான பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் திருக்குறள் அறத்துப்பாலை மொழிபெயர்த்து விளக்கம் எழுதினார். திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியிட்டார். எல்லீஸ் வெளியிட்ட 'திராவிடமொழிக் குடும்பம்' குறித்து ஆய்வு செய்து அயர்லாந்து நாட்டவரான இராபர்ட் கால்டுவெல் "வடமொழிக் கலப்பு இன்றித் தமிழ் தனித்து இயங்க வல்லது” என்னும் கருத்தை உலகிற்கு உணர்த்தினார்.
            'அரிஸ்டாட்டில்கூடச் சொல்லாத அறிவுரைகள் வள்ளுவரால் கூறப்பட்டிருப்பதாக' வியந்த ஜி. யு. போப் திருக்குறள், நாலடியார், திருவாசகம் முதலிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தமிழின் இலக்கிய வளத்தை உலகு அறியச் செய்தார். ஜெர்மானியரான இரேனியஸ் தமிழின் முதல் அறிவியல் நூலைப் 'பூமி சாஸ்திரம்' என எழுதினார். பூகோளம், சரித்திரம், இயற்கை, வான சாஸ்திரம், சூரிய மண்டலம், காலநூல், தர்க்கம் முதலான பாடநூல்களைத் தமிழில் எழுதி அளித்தார். தமிழில் கலைச்சொற்களை முதன்முதலில் இவரே உருவாக்கினார் எனலாம்.
            தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றிய மொழியியல் வல்லுநராகத் திகழ்ந்த செக் நாட்டவரான கமில் சுவெலபில், தமிழ்க்கடவுள் முருகப் பெருமானிடம் கொண்ட ஈடுபாட்டால் தான் எழுதிய தமிழ் இலக்கிய வரலாற்று நூலுக்கு 'தி ஸ்மைல் ஆஃப் முருகன்' எனப் பெயரிட்டார். திராவிட மொழி யியல், சங்க இலக்கியம், தமிழ் யாப்பு ஆகியன குறித்து ஆங்கிலத்திலும் தென்னிந்தியா பற்றிச் செக் மொழியிலும் எழுதியுள்ளார்.
            இவ்வாறாக, அயல்நாட்டவர் தமிழ்மொழிக்கு அரும்பணிகள் பலவற்றை ஆற்றியுள்ளனர்.

     

    II. மொழியை ஆள்வோம்

    அ) சான்றோர் சித்திரம்  

    (சங்கரதாசு சுவாமிகள்)
            நாடகத்தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்த சங்கரதாசு சுவாமிகள், நாடகங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும், முதல்வராகவும் விளங்கினார். பெரும்புலவர்கள், சுவாமிகளின் பாடல் திறத்தையும், உரையாடல் தரத்தையும் உணர்ந்து நெஞ் சாரப் பாராட்டியுள்ளனர். இளமையில் புலவரேறு பழநி தண்டபாணி சுவாமிகளைத் தேடிச் சென்று, தமிழறிவைப் பெற்ற இவர், தம்முடைய 16ஆவது வயதிலேயே கவியாற்றல் பெற்று வெண்பா, கலித்துறை, இசைப்பாடல்களை இயற்றத் தொடங்கிவிட்டார். இரணியன், இராவணன், எமதருமன் ஆகிய வேடங்களில் நடித்துப் புகழடைந்தபோது அவருடைய வயது 24. வண்ணம், சந்தம் பாடுவதில் வல்லவராயிருந்த சுவாமிகளின் 'சந்தக் குழிப்புகளின்' சொற்சிலம்புகளைக் கண்டு, அக்காலத்தில் மக்கள் வியப்புற்றனர்.
            சங்கரதாசு சுவாமிகள், 'சமரச சன்மார்க்க சபை' என்னும் நாடகக் குழுவை உருவாக்கினார். இந்தக் குழுவில் பயிற்சி பெற்ற எஸ். ஜி. கிட்டப்பா, நாடகக் கலைத்துறையில் பெரும்புகழ் ஈட்டினார். நாடக மேடை, தரம் குன்றிய நிலையில், மதுரை வந்த சுவாமிகள், 1918இல், 'தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை” என்னும் நாடக அமைப்பை உருவாக்கி, ஆசிரியர் பொறுப்பேற்றார். இங்கு உருவானவர்களே டி. கே. எஸ். சகோதரர்கள். நாடகத்தின்மூலம் மக்களுக்கு அறவொழுக்கத்தையும், தமிழின் பெருமையையும் பண்பாட்டையும் தம் சுவை மிகுந்த பாடல், உரையாடல் வழியே உணர்த்திய சங்கரதாசு சுவாமிகளை நாடகத்துறைக் கலைஞர்கள், 'தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்' என்று உளமகிழ்ந்து போற்றுகின்றனர்.
     
    1. தமிழ்ச் சொல்லாக்குக சன்மார்க்கம், வித்துவ பால சபை.
    சன்மார்க்கம் - ஆன்மிகநெறி
    வித்துவ பால சபை - இளங்கலைஞர் மன்றம்
     
    2. நாடகத் தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்தவர் சங்கரதாசு சுவாமிகள் - அடிக்கோடிட்ட வினையாலணையும் பெயரை வினைமுற்றாக்கித் தொடரை எழுதுக.
    நாடகத் தமிழை வளர்த்த நல்லறிஞராய் சங்கரதாசு சுவாமிகள், திகழ்ந்தார்.
     
    3. ஈட்டினார் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
    ஈட்டு + இன் + ஆர்
    ஈட்டு - பகுதி,
    இன் - இறந்தகால இடைநிலை,
    ஆர் - படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி.
     
    4. தன்னன்ன தானேன தன்னானே இந்தச் சந்தத்தில் பொருள் பொதிந்த இரண்டு அடிகள் கொண்ட பாடல் எழுதுக.
    எ-கா : இந்திய நாட்டினில் வாழ்வதையே
    இன்பமாய்க் கொண்டிடல் வேண்டுமப்பா......
    வளமாய் வாழ்ந்திடப் பொருள் வேண்டும்
    அதை ஈட்டிட நேர்மை மனம்வேண்டும்.
     
    5. தமிழ் நாடகத் தலைமையாசிரியர் சிறப்புப் பெயருக்கான காரணத்தை அளிக்க.
    நாடகத்தின்மூலமும், தம் சுவை மிகுந்த பாடல், உரையாடல் வழியேயும் மக்களுக்கு அறவொழுக் கத்தையும், தமிழின் பெருமையையும் உணர்த்திய சங்கரதாசு சுவாமிகளை நாடகத்துறைக் கலைஞர்கள், 'தமிழ் நாடகத் தலைமையாசிரியர்' என உளமகிழ்ந்து போற்றினர்.

     

    ஆ) தமிழாக்கம் தருக.

    Balu: Hi Velu, Good evening
    Velu : Hi Balu. Good evening.
    Balu: Yesterday you were watching the Republic day function the whole day.
    Velu : Yes. I was touched by one award ceremony.
    Balu : Which award?
    Velu : Param vir Chakra award, highest award for army personnel.
    Balu:Why were you touched?
    Velu: Most of the awards were received by the wives of soldiers posthumously
    Balu: Why? What do you mean by posthumous?
    Velu: It means 'after death. Many soldiers had laid down their lives protecting the border of our Motherland. They have sacrificed their lives to save our Country. So that we can be free and safe.
    விடைகுறிப்பு:
    பாலு: நண்பா வேலு! மாலை வணக்கம்.
    வேலு : நண்பா பாலு! மாலை வணக்கம்.
    பாலு : நேற்று நீங்கள் குடியரசு நாள் விழா முழுவதையும் பார்த்துக் கொண்டு இருந்தீர்கள்.
    வேலு: ஆமாம். ஒரு விருது வழங்கும் விழா என் மனத்தைத் தொட்டது.
    பாலு: எந்த விருது?
    வேலு : 'பரம்வீர் சக்ரா' விருது. இஃது இராணுவ வீரர்களுக்கான உயர்ந்த விருது.
    பாலு : ஏன் மனத்தைத் தொட்டது?
    வேலு : பெரும்பாலும் இராணுவ வீரர்களின் மனைவியரே அந்த விருதுகளை, வீரரின் இறப்பிற்குப் பிந்தைய விருதுகளாகப் பெற்றனர்.
    பாலு: என்ன! இறப்பிற்குப் பிந்தைய விருதுகளா! அப்படியென்றால்?
    வேலு: இறப்பிற்குப் பிந்தைய விருதுகள் என்றால், வீரர்களின் மறைவுக்குப்பின் வழங்கப்படுவது என்பது பொருள். நம் தாய்நாட்டின் எல்லையைக் காப்பதற்காக ஏராளமான இராணுவ வீரர்கள் தங்கள் வாழ்வைத் தியாகம் செய்துள்ளனர். அவர்கள் நம் நாட்டைக் காப்பதற்காகத் தங்கள் உயிரையே தியாகம் செய்திருக்கிறார்கள். அதனால்தான் நாம் சுந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ முடிகிறது.

     

    இ) மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

    சான்று: எதிர் நீச்சல் - 
    வாழ்க்கையில் எத்தனை தோல்விகள் வந்தாலும், அவற்றைக் கடந்து எதிர்நீச்சல் போட்டு, வெற்றி பெற வேண்டும்.
     
    1.சொந்தக்காலில் நிற்றல்: 
    குறைவான சம்பளம் பெறும் குடும்பத் தலைவர், சொந்தக்காலில் நிற்க இயலாமல் அவதிப்படுகின்றார்.
     
    2. தாளம் போடுதல்: 
    அதிகாரியின் முட்டாள்தனமான பேச்சுகளுக்கும் வழிகாட்டுதல்களுக்கும் உதவியாளர்கள் தாளம் போடுகின்றனர்.
     
    3. மதில்மேல் பூனை: 
    அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியம் வருமா வராதா என்பது, மதில்மேல் பூனை நிலையில் உள்ளது.
     
    4. நிறைகுடம்: 
    புதிதாக வந்துள்ள எங்கள் பள்ளியின் முதல்வர் ஒரு நிறைகுடம்.
     
    5. கைதூக்கிவிடுதல்: 
    கிராமத்திலிருந்து வந்த இளைஞர்களைக் கைதூக்கிவிடும் பணியில், ஒரு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
     
    6. கண்ணாயிருத்தல்: 
    இரமேஷ் தன் படிப்பிலேயே கண்ணாயிருந்ததால், முதல் வகுப்பில் தேறி விட்டான்.
     
    7. அவசரக்குடுக்கை: 
    கோபி, எந்தக் காரியத்தையும் யோசிக்காமல் செய்து, வம்பில் மாட்டிக் கொள்ளும் ஓர் அவசரக்குடுக்கை.
     
    8. முதலைக் கண்ணீர்: 
    பெற்றோரை முதியோர் விடுதியில் விடும் மகன்கள், இறந்தபின் பெற்றோர்களை எண்ணி, முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.
     
    9.கானல்நீர்: 
    தமிழகத்தில் வேளாண்மை வளர்ச்சி, கானல்நீராகி விடுமோ?

    ஈ) இலக்கியநயம் பாராட்டுக.

    சுதந்திரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலும்
    சுகம்தரும் உணர்ச்சியும் வேறுண்டோ?
    பதம்தரும் பெருமையும் பணம்தரும் போகமும்
    பார்த்தால் அதைவிடக் கீழன்றோ?
    இதம்தரும் அறங்களும் இசையுடன் வாழ்தலும்
    எல்லாம் சுதந்திரம் இருந்தால்தான்
    நிதம்தரும் துயர்களை நிமிர்ந்துநின் றெதிர்த்திட
    நிச்சயம் சுதந்திரம் அதுவேண்டும்.
                                                    -நாமக்கல் கவிஞர்
    ஆசிரியர் குறிப்பு:
    'நாமக்கல் கவிஞர்' ஒரு சிறந்த கவிஞர்; ஒவியம் வரைபவர்; கதை எழுதுபவர். தேசப்பற்றும் தமிழ்மொழிப் பற்றும் உடையவர். சுதந்திரப் போராட்ட களத்தில் பங்கு பெற்றவர். தேசியத்தையும் தமிழையும் தமிழ் இனத்தையும் போற்றி வாழ்ந்தவர். சுதந்திர இந்தியாவில், தமிழ்நாடு சட்டமன்றத்தில், அரசவைக் கவிஞராகவும் திகழ்ந்தவர்.
     
    மையக்கருத்து:
    நாமக்கல் கவிஞர் பாடிய இக்கவிதை, "சுதந்திரம் இல்லை என்றால், வாழ்வில் நாம் எந்தச் சுகத்தையும் பெறவோ, அனுபவிக்கவோ முடியாது. எதையும் சாதித்து இன்பம் துய்க்கச் சுதந்திரமே இன்றியமையாதது" என்பதை மையக்கருத்தாகக் கொண்டுள்ளது.
     
    எதுகை:
    அடிகளிலோ, சீர்களிலோ முதலெழுத்து அளவு ஒத்திருக்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகையாகும்.
     
    அடிஎதுகை:
    சுந்திரம், பம்தரும்
    ம்தரும், நிம்தரும்
     
    மோனை:
    அடிகளிலோ சீர்களிலோ முதலெழுத்து ஒன்றிவருவது மோனை. 
     
    சீர்மோனை:
    தம்தரும், ணம்தரும், பார்த்தால்
    தம்தரும், சையுடன், ருந்தால்
    நிதம்தரும், நிமிர்ந்துநின் நிச்சயம் 
     
    இயைபு: 
    அடிதோறும் இறுதிச்சீரோ, சொல்லோ, எழுத்தோ ஒன்றிவருவது இயைபுத்தொடை ஆகும்.
    வேறுண்டோ? கீழன்றோ?
     
    சுவை:
    சுதந்திரம் பற்றிப் பெருமிதமாய்ப் பாடியுள்ளதால் இதில், 'பெருமிதச் சுவை' பயின்று வந்துள்ளது.
     
    சந்தம்:
    எளிய சொற்களில், அரிய கருத்தைச் சந்த நயம் அமைய 'எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த'மாகக் கவிஞர் பாடியுள்ளது நயம் பயக்கிறது.
     
    அணி:
    இச்செய்யுளில் சுதந்திரத்தின் சிறப்புகள் இயல்பாகக் கூறப்பட்டுள்ளன. எனவே, 'இயல்பு நவிற்சி அணி' அமைந்துள்ளது.

    வரைபடம் கொண்டு விவரிக்க

    நீங்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். வழி தெரியாத ஒருவர், உங்களிடம் வந்து நகலகத்திற்கு வழி கேட்கிறார். கீழ்க்காணும் வரைபடத்தைக் கொண்டு, அப்புதியவருக்கு வழிகாட்டுங்கள்.
    பேருந்து நிறுத்தத்தில் இருந்து கிழக்குத் திசையில் நேராகச் செல்லுங்கள் இடப்புறம் தேவாலயம் வரும். அதனைக் கடந்து வலப்புறம் திரும்பினால் மேலைத்தேர்த்தெரு உள்ளது. அதில் தெற்குத் திசையில் நேராகச் சென்றால், காந்தி சதுக்கத்திற்கும் மசூதிக்கும் நடுவில் அறம் வளர்த்த மாடத்தெரு உள்ளது. அதில் கிழக்குத் திசையில் நேராகச் செல்லுங்கள். வலப்புறம் சிறுவர் பூங்காவைக் கடந்து, கூட்டுறவு வங்கியைக் கடந்தால், கீழை தேர்த்தெரு குறுக்கிடும். அச்சாலையை நேராகக் கடந்து சென்றால் நூலகத்தை நீங்கள் அடையலாம்.

     

    III. மொழியோடு விளையாடு

    அ) எண்ணங்களை எழுத்தாக்குக.

    விடைகுறிப்பு:
    உணவுக்கு ஆசைப்பட்ட கயல்
    தூண்டிலில் சிக்கியது ஆசையில்!
    ஆசைப்படப்பட துன்பம் பெருகும்
    ஆசைவிடவிட இன்பம் பெருகும்!
    என்ற தத்துவம் அறியாக் கயல்
    அற்ப ஆயுளில் உயிரை விட்டது!
     

    ஆ) சொல்லெடுத்துத் தொடர் அமைக்க.

    கீழுள்ள கட்டத்தினுள் நுழைந்து சொற்களை எடுத்தும் தேவையான சொற்களைச் சேர்த்தும் தொடர்கள் அமைக்க. (அடைபட்ட பகுதியில் உள்ள சொற்களைத் தவிர்க்கவும்.)
    எ - டு :மாணவர்கள் வகுப்பறையினுள் நுண்கலைகளையும் கற்க வேண்டும்.

    பள்ளிக்கூடத்தில் காலையில் வழிபாடு செய்வோம்.
    பள்ளிக்கூடம் வருகின்ற மாணவர், எழுதுகோல் கொண்டுவர வேண்டும்.
    பள்ளிக்கூடத்தில் சிறப்பு வகுப்புக்குக் கூடுதல் நேரம் நடக்கும்.
    உடல் உறுதி பெற, மாணவர்கள் விளையாட்டை மேற்கொள்ள வேண்டும்.
    காமராசர் கொண்டு வந்த மதிய உணவுத்திட்டம், பள்ளிக்கூடத்தில் இப்பொழுதும் நடக்கும்.
    வகுப்பறையில் ஆசிரியர் கரும்பலகையைப் பயன்படுத்த வேண்டும்.
    ஆசிரியர், மாணவரிடம் சிந்தனையை வளர்க்க வேண்டும்.
    மாணவர், வகுப்பறையில் வாசிப்புத் திறமையை வளர்க்க வேண்டும்.

    தவிர்க்கப்பட்ட சொற்கள்:
    1. தாமதம்,
    2. மன்னிப்பு,
    3. வெளியேற்றம்,
    4. பட்டினி,
    5. புறக்கணிப்பு,
    6. வேலையின்மை,
    7. தண்டனை,
    8. தவறவிடல்.

    படித்துப் பார்த்துப் படைக்க.

    பூமி முத்தம்
    பத்தாவது தடவையாக
    விழுந்தவனுக்கு
    முத்தமிட்டுச் சொன்னது பூமி :
    ஒன்பது முறை எழுந்தவனல்லவா நீ!
       -ஈரோடு தமிழன்பன்
    விளையாட்டு
    எப்போதும் மத்தாப்பு
    கொளுத்தி விளையாடுகிறது
    மலையருவி!
                    -கழனியூரன்
    துண்டு
    துன்பங்களை நொடியில்
    துண்டு துடைக்கிறது
    மழலையின் சிரிப்பு.
     



    IV. நிற்க அதற்குத் தக.

    அ)மனித இனம் கூடிவாழும் இயல்புடையது. நாம் அன்றாடம் பலருடன் பழகக்கூடிய இன்றைய சூழலில் ஏற்படக்கூடிய சிறிய சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

    சிக்கல்
    தீர்வு
    பக்கத்து வீட்டுக்காரர், மிகச் சத்தமாகப் பாடல் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
    சன்னல்களை அடைத்து, காதை அடையும் ஒலி அளவைக் குறைப்பேன். காதில் பஞ்சை வைத்துக்கொண்டு நிம்மதியாக இருப்பேன்.
    நீங்கள் மட்டைப்பந்துப் போட்டியைப் பார்க்க வேண்டும் என்று விரும்பும் நேரத்தில், உங்கள் தங்கை தொலைக்காட்சித் தொடர் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
    தங்கையைத் தொலைக்காட்சித் தொடரைப் பார்க்கச் சொல்லிவிட்டு, நண்பன் வீட்டிற்குச் சென்று, அவனோடு சேர்ந்து மட்டைப் பந்துப் போட்டியைக் கண்டு மகிழ்வேன்.
    உங்கள் அருகில் அமர்ந்திருக்கும் உங்கள் வகுப்புத் தோழர், உங்கள் மேசைமீது உணவினை இறைத்தபடி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
    மேசையின்மீது சிதறாமல் சாப்பிடுமாறு அன்பாகச் சொல்வேன். மீறியும் அப்படிச் சாப்பிட்டால். அவர் கண்ணுக்கு முன்பாக சிதறிய உணவை நானே எடுத்துச் சுத்தம் செய்வேன்.
    நீங்கள் அடுத்த நாள் தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருக்கும்போது, உங்கள் வகுப்புத் தோழர், பாடத்தில் ஏற்பட்ட ஐயத்திற்காக உங்களுக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுக்கிறார்.
    தொலைபேசி அழைப்பை ஏற்று, பாடத்தில் வகுப்புத் தோழருக்கு ஏற்பட்ட ஐயத்தை போக்குவேன். இதனை நான் படிப்பதற்கான இடையூறாகக் கருத மாட்டேன். கற்றுக் கொடுப்பது படிப்பதற்குச் சமமான செயல் என்றே எண்ணுவேன்.

    ஆ) படிப்போம்; பயன்படுத்துவோம்!    

    Strategies - உத்திகள்
    Equality - சமத்துவம்
    Trade Union - தொழிற்சங்கம்
    Pseudonym - புனைபெயர்
    Multiple Personality - பன்முக ஆளுமை

    V இலக்கணத் தேர்ச்சி கொள்

    1. திருத்தக் குறியீடுகளின் வகைகளைக் கூறுக?
    • பிழைகள் உள்ள அச்சுப்படியைத் திருத்துவதற்குக் கையாளப்படும் திருத்தக் குறியீடுகளை ஐந்து வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை,
    i. பொதுவானவை
    ii. நிறுத்தக்குறியீடுகள் தொடர்பானவை
    iii. இடைவெளி தரவேண்டியவை
    iv. இணைக்க வேண்டியவை
    V. எழுத்து வடிவம் என்பவை ஆகும்.
     
    2. ஏற்ற இடங்களில் அச்சுத் திருத்தக் குறியீடுகளைப் பயன்படுத்தும் முறையைக் கீழ்க்காணும் பத்தியின்மூலம் அறிக.
    அறிஞர் வாழ்வில் நகைச்சுவை
    கவிஞர் கண்ணதாசன் கல்லூரி ஒன்றில் கயங்கத்தில் கலந்துகொண்டு
    களிதை யை வாசிக்க ஆரம்பித்தார்ரீ. அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது லவர் கவிதை # 1 வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடித்தது ம் கரவொலி
    அடங்க வெகு நேரம் பிடித்தது கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் சொன்னார். "இன்று | நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு
    கவிதைய எழுத்துக்கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்/ அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிசசு கவிதையை அவரை வாசிக்காெ சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன். என்கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் # இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு. ஆக, சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய சொல்லும் பொருளைப் பற்றிக்
    கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை என்று புரிகிறது".
     
    விடைகுறிப்பு : 
    கவிஞர் கண்ணதாசன், கல்லூரி ஒன்றில் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது. அவர் கவிதை வாசிக்கும்போது, ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடித்ததும், கரவொலி அடங்க வெகுநேரம் பிடித்தது. கைதட்டல்கள் முடிந்ததும், கண்ணதாசன் சொன்னார், “இன்று நான் வாசித்த கவிதை, நான் எழுதியது அன்று. உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர், நேற்று ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு வந்து, என்னிடம் காண்பித்தார். அது மிக நன்றாக இருந்தது. எனவே, நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்கச் சொல்லிவிட்டு, அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன். என் கவிதையை அவர் வாசிக்கும்போது, எந்தவித ஆரவாரமும் இல்லை. அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது, பலத்த வரவேற்பு. ஆக, சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழியச் சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை என்று புரிகிறது.”














    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive