12th Tamil - Book Back Answers - Unit 2 - Guides

   


 


    Plus Two / 12th Tamil - Book Back Answers - Unit 2 - Download

    Tamil Nadu Board 12th Standard Tamil - Unit 2: Book Back Answers and Solutions

        This post covers the book back answers and solutions for Unit 2 – from the Tamil Nadu State Board 12th Standard Tamil textbook. These detailed answers have been carefully prepared by our expert teachers at KalviTips.com.

        We have explained each answer in a simple, easy-to-understand format, highlighting important points step by step under the relevant subtopics. Students are advised to read and memorize these subtopics thoroughly. Once you understand the main concepts, you’ll be able to connect other related points with real-life examples and confidently present them in your tests and exams.

        By going through this material, you’ll gain a strong understanding of Unit 2 along with the corresponding book back questions and answers (PDF format).

    Question Types Covered:

    • 1 Mark Questions: Choose the correct answer, Fill in the blanks, Identify the correct statement, Match the following 
    • 2 Mark Questions: Answer briefly 
    • 3, 4, and 5 Mark Questions: Answer in detail

    All answers are presented in a clear and student-friendly manner, focusing on key points to help you score full marks.

    All the best, Class 12 students! Prepare well and aim for top scores. Thank you!

    இயல் 2 

    I. திறன் அறிவோம்

    அ) பலவுள் தெரிக.

    1. பொருத்துக.
    அ. குரங்குகள் - 1) கன்றுகளைத் தவிர்த்தன
    ஆ. விலங்குகள் - 2) மரங்களிலிருந்து வீழ்ந்தன
    இ. பறவைகள் - 3) குளிரால் நடுங்கின
    ஈ. பசுக்கள் - 4) மேய்ச்சலை மறந்தன

    அ) 1, 3, 4, 2
    ஆ) 3, 4, 2, 1
    இ) 3, 2, 1, 4
    ஈ) 2, 1, 3, 4
    விடைகுறிப்பு : 
    ஆ) 3, 4, 2,1

    2. 'நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது' என்று, அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது
    அ) சூரிய ஒளிக்கதிர்
    ஆ) மழைமேகங்கள்
    இ) மழைத்துளிகள்
    ஈ) நீர்நிலைகள்
    விடைகுறிப்பு : 
    இ) மழைத்துளிகள்

    3. சென்னை, வெறும் நகரம் மட்டுமன்று, அது நம்பிக்கை மையம் – காரணம் _________.
    அ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்
    ஆ) மென்பொருள் வன்பொருள் வாகன உற்பத்தியில் பங்கு
    இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
    ஈ) அ, ஆ, இ அனைத்தும்
    விடைகுறிப்பு : 
    ஈ) அ, ஆ, இ அனைத்தும்

    4. பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பைத் தேர்க.
    அ) வினைத்தொகை.
    ஆ) உரிச்சொல் தொடர்.
    இ) இடைச்சொல் தொடர்.
    ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
    விடைகுறிப்பு : 
    ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

    5. கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
    காரணம் : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.

    அ) கூற்று சரி, காரணம் தவறு
    ஆ) கூற்று தவறு, காரணம் சரி
    இ) கூற்று தவறு, காரணம் தவறு
    ஈ) கூற்று சரி, காரணம் சரி
    விடைகுறிப்பு: 
    ஈ) கூற்றும் சரி, காரணம் சரி

    ஆ) குறு வினா

    1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
    • காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு 1869இல் உருவாக்கப்பட்டது கீழ்திசைச் சுவடிகள் நூலகம்.
    • இது அரிய ஒலைச்சுவடிகள், தாள் சுவடிகள், புத்தகங்கள் எனப் பெருந்தொகுப்புகளைக் கொண்டது.

    2. 'இனநிரை' - பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.
    • இனநிரை - இனம் + நிரை
    • 'மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்' என்னும் விதிப்படி, நிலைமொழி ஈற்றிலுள்ள மகர ஒற்று (ம்) அழிந்து, 'இனநிரை' எனப் புணர்ந்தது.

    3. இந்தோ - சாரசனிக் கட்டடக்கலை குறிப்பு வரைக.
    • முகலாயக் கட்டடக் கலை, பிரித்தானியக் கட்டடக் கலை, இந்தியப் பாரம்பரியப் பாணி ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்பட்டது இந்தோ  - சாரசனிக் கட்டடக்கலை.

    4. ‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’ – விளக்கம் தருக.
    • மழைக்காலத்தில் வானம் இருண்டு நகரமே கருமையாகக் காட்சியளிக்கின்றது.
    • அந்தச் சமயத்தில் திடீரெனச் சூரியன் தோன்றுகிறான்.
    • சூரியக்கதிர்களின் வெண்ணிற ஒளி எங்கும் பரவி ஒளிரத் தொடங்குகிறது.
    • இருண்டிருந்த நகரம், பட்டை தீட்டப்பட்ட வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கின்றது.

    இ) சிறு வினா

    1. “நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
    உறிஞ்சுகின்றன ஒளிக்கதிர்கள்" இக்கவிதையின் அடி
    “தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே" - என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக.

            நீர்நிலைகளில் உள்ள நீரானது சூரியனின் கதிர்களால் ஈர்க்கப்படுகிறது. இதனையே சூரியன் தன் உதடுகளைக் குவித்து நீரை உறிஞ்சுகிறது எனப் பாடியுள்ளார் கவிஞர்.

    'மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே
    தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே'
            என்று நாட்டுப்புறப் பாடல் என்ன கூறுகிறது?
        
            இப்பாடலடியில், "அதிகாலையில் மூங்கில் இலையின் நுனியில் பனித்துளிகள் இருக்கின்றன. அப்பனித்துளிகள் எல்லாம் சூரியனின் கதிர்கள் வெளிப்பட்டதும் நீராவியாக மாற்றம் பெறுகிறது" என்பதையே உணர்த்துகின்றது.

            எனவே, நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள கவிதையின் அடியானது, அந்த நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைந்துள்ளது எனலாம்.

    2. வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
    • தாழ்வான பகுதிகளில் பெருகிய மழைவெள்ளத்தை வெறுத்த கோவலர்கள் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை, வேறு மேடான நிலங்களில் மேயவிட்டனர்.
    • உடலில் பட்ட குளிரைப்போக்கக் கோவலர் பலர் கைகளுக்குக் கொள்ளி நெருப்பினால் சூடேற்றினர். 
    • சூடேறிய கைகளில் உள்ள அந்த வெம்மையை கன்னத்தில் வைத்துக் கொண்டனர். 
    • இவ்வாறாகக் கோவலர்கள் வாடைக் காலத்தில், பாதுகாப்பைத் தேடிக் கொண்டனர்.

    3. சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
    • தமிழ்நாடு ஆவணக் காப்பகம்
    • கோட்டை அருங்காட்சியகம்
    • சேப்பாக்கம் அரண்மனை
    • தென்னகத் தொடர்வண்டி நிலையம்
    • பொது அஞ்சல் அலுவலகம்
    • சென்னைப் பல்கலைக்கழகம்
    • எழும்பூர் அருங்காட்சியகம்
    • கன்னிமரா நூலகம்
    • உயர்நீதி மன்றம்
    • ரிப்பன் கட்டடம்.
    • சென்னைத் திரைப்படத்துறை சார்ந்த இடங்கள்
    • திரை அரங்குகள்
            ஆகிய இந்திய சராசனிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட பல கட்டடங்கள், சென்னையின் பண்பாட்டு அடையாளங்களாக, இன்றும் நிலைத்து நிற்கின்றன.

    4. சென்னை, 'அறிவின் நகரம்' என்பதைச் சான்றுகளுடன் விளக்குக.
    • ஆங்கிலேயர் தங்கள் ஆட்சியைத் தென்னிந்தியாவில் நிலைப்படுத்த உருவாக்கிய தலைநகர் 'சென்னை' மாநகரமாகும். 
    • பலவேறு துறைகளில் சிறந்து விளங்கிய சென்னை நகரம், அறிவின் நகரமாகவும் திகழ்ந்தது.
    • சென்னையில் 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய முறையில் கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் பல உருவாயின. 
    • 19ஆம் நூற்றாண்டில் பள்ளிகள் பல பெருகின. சென்னைக் கோட்டைக் கல்லூரி, சென்னைக் கிறித்தவக் கல்லூரி, பிரசிடென்சி பள்ளி, (பின்னாளில் மாநிலக் கல்லூரி), அறிவுப் புரட்சிக்கு வழிவகுத்த சென்னைப் பல்கலைக்கழகம், பெண்களுக்கான இராணிமேரி கல்லூரி ஆகியவை உருவாயின.
    • ஆசிரியப் பயிற்சிக் கல்லுரிகள், உடற்பயிற்சிக் கல்லூரி, கவின் கலைக்கல்லூரி, மாற்றுத் திறனாளிகளுக்கான கல்விக்கூடங்கள் எனப் பல உருவாயின. 
    • இவற்றால் சென்னை அறிவின் நகரமாகத் திகழ்கிறது.

    ஈ) நெடு வினா

    1. நீங்கள் வியந்து பார்த்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.

    முன்னுரை:

            'கல்வி நகரம்' என்றும் 'முட்டை நகரம்' என்றும் மக்களால் பேசப்படும் நாமக்கல் நகரின் சிறப்பையும் வரலாற்றையும் இந்தக் கட்டுரையில் ஆராய்வோம்.

    முட்டை நகரம்:
            நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு அனுப்பப்படும் முட்டைகள், நாமக்கல் பகுதியில் உற்பத்தி செய்யப்படுவதால், இது 'முட்டை நகரம்' என்றும், 'கோழிகள் நகரம்' என்றும் அழைக்கப்படுகிறது.

    நாமக்கல் கோட்டை:
            நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டை, இந்நகரின் சிறப்பம்சமாகும். இக்கோட்டை, ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தென்மேற்குத் திசையில் அமைந்துள்ள குறுகலான படிகளின்மூலம் இக்கோட்டையைச் சென்றடைய முடியும்.

    மன்னராட்சியில் நாமக்கல்:
            ஒரு காலத்தில் நாமக்கல், பல்லவ வம்சத்தில் மணம் புரிந்திருந்த அட்டிக்குல மன்னன் குணசீலா என்பவரின் ஆட்சியில் இருந்தது. கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் ஆட்சியிலும், பின்னர் விஜயநகரப் பேரரசின் ஆளுகையிலும் இருந்தது. அதன் பின்னர் ஹைதர் அலியின் படைத்தலைவர்களில் ஒருவரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு, 1768ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.

    நீர் ஆதாரங்கள்:
            நாமக்கல் மாவட்டத்தின் வட பகுதிகள் மலைப்பிரதேசமாகவும், தென் பகுதிகள் சமவெளிகளாகவும் உள்ளன. இம்மாவட்டத்தின் பிரதான அருவிகளான காவிரி, ஐயாறு, கரிப்பொட்டான் ஆறு மற்றும் திருமணிமுத்தாறு ஆகியன, மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களாகும்.

    கொல்லிமலை:
            நாமக்கல் மாவட்டத்தின் தோட்டம் எனப்படுவது கொல்லிமலை. இது, 'நாடு' என்றழைக்கப்படும் 16 கிராமப் பஞ்சாயத்துகளை உள்ளடக்கியுள்ள ஊராட்சி ஒன்றியத்தின்மூலம் நிர்வகிக்கப்படுகிறது. கொல்லி மலை, 371.03 சதுர கி.மீ. பரப்பளவு உடையது. கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் உள்ளது.

            இங்குள்ள பழங்குடிகள், 'மலையாளிகள்' ஆவர். வல்வில் ஓரி என்னும் சிற்றரசனால் ஆளப்பட்ட மலை இது. இங்குள்ள பிரசித்தி பெற்ற 'அறப்பளீஸ்வரர்' ஆலயம் தற்போது இந்துக் கோவிலாக இருந்தாலும், முற்காலத்தில் ஜைன மதத் துறவிகளின் இருப்பிடமாக இருந்துள்ளது. இம்மலையில், 'ஆகாய கங்கை' என்னும் புகழ்மிக்க அருவி அமைந்துள்ளது.

    லாரிகள் நகரம்:
    லாரிகளுக்குக் கூடு கட்டும் தொழில் இங்குப் பிரபலம். எனவே, நாமக்கல் இந்தியத் தொழில் நகரங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது. இத்தொழில், நாமக்கல்லின் தனிச்சிறப்பு. 1960ஆம் ஆண்டிலிருந்து இத்தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 150க்கும் மேற்பட்ட லாரிப் பட்டறைகள் இங்குள்ளன.

            லாரிகள், இழுவை இணைப்பு வண்டிகள், சமையல் எரிவாயு கொண்டுசெல்லும் டேங்கர் லாரிகள் போன்ற பலவகை லாரிகள், நாமக்கல் மாவட்டத்தில் உள்ளன. எனவே, நாமக்கல் 'லாரிகள் நகரம்' என்றும் அழைக்கப்படுகிறது.

    கல்வி நகரம்:
    நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பிறந்த மாவட்டம் இது. எனவே, இவர் பெயரில் ஒரு அரசுக் கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இம்மாவட்டத்தில் உள்ளது. நாமக்கல் நகரிலும் சுற்று வட்டாரத்திலும் புகழ்மிக்க தனியார் பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

    கோவில் நகரம்:
    புகழ்மிக்க குடைவரைக் கோவிலான நரசிம்மர் கோவிலும், நாமகிரித் தாயார் கோவிலும், உயரமான ஆஞ்சநேயர் கோவிலும் நாமக்கல் நகரின் அடையாளங்கள் எனலாம். 6.7மீ உயரமுள்ள ஆஞ்சநேயர் சிற்பம், கி. பி. 966இல் உருவாக்கப்பட்டது.

    தொழில் நகரம்:
    இம்மாவட்டத்தில் முக்கியத் தொழில் ஆடை நெய்தல். அது மட்டுமன்றி ஜவ்வரிசி ஆலைகளும், நெய் தயாரிப்பும், நூற்பாலைகளும், விசைத்தறிகளும், கைத்தறிகளும், தனியார் சர்க்கரை ஆலையொன்றும், தனியார் காகித ஆலையும் இம்மாவட்டத்தில் உள்ளன.

    முடிவுரை:
    முட்டை நகரம், லாரிகள் நகரம், கல்வி நகரம், கோவில் நகரம் எனப் பல்வேறு விதமான வளர்ச்சிகளைக் கொண்ட அற்புத நகரமாக நாமக்கல் நகரம் விளங்கி வருகிறது.

    2. நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைத் தொகுத்து எழுதுக.
     
    முன்னுரை:
            நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் கூதிர்க்காலத்து மழைப் பின்னணியையும், முல்லைநில மக்கள், பறவைகள், விலங்குகள் ஆகியன குளிரால் அடைந்த துன்பத்தையும் குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.

    புதுமழை:
            தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது, உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது. தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலை உடைய ஆயர், எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேயவிட்டனர். தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையைக் கண்டு ஆயர்கள் வருத்தம் அடைந்தனர்.

    விலங்குகளின் துன்பம்:
            பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடு ஏற்றிய போதிலும், அவர்களின் பற்கள் குளிரால் நடுங்கின. விலங்குகள், குளிர் மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் குளிரால் நடுங்கின. மரங்களில் தங்கியிருந்த பறவைகள், நிலத்தில் வீழ்ந்தன. பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச் செய்வது போலிருந்தது அக்குளிர்கால இரவு.

    முடிவுரை:
            ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் குளிர்காலம் என்று அழைத்தனர். முல்லைநில மக்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றின் வாழ்வில் மழையும் குளிரும் உண்டாக்கிய மாற்றங்களை, இக்கட்டுரை வாயிலாக அறிந்து கொண்டோம்.

    3. பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.
     
    முன்னுரை:
            நமக்குப் பாடமாக அமைந்துள்ளது உத்தமசோழன் எழுதிய 'முதல்கல்' சிறுகதை. இக்கதையின் வாயிலாகப் பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்ச்சியால் மாற்றிய மருதனின் பண்புநலத்தைக் குறித்து நாம் ஆராய்வோம்.

    வெள்ளம் சூழ்ந்த பசும்பயிர் வயல்வெளி:
            வளவனாற்றின் வடகரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை, பச்சைப் பசேல் என்று விரிந்து கிடந்தது வயல்வெளி. அடர்ப் பச்சையில் தீவுபோல ஊர்க்குடியிருப்பும், மரங்களுக்கிடையில் வயல்வெளி எங்கும் நடவு முடிந்து ஒரு வாரம் பத்து நாளான பச்சை பிடிக்கத் தொடங்கியிருந்த இளம்பயிரும், வெளிர் பச்சையில் இப்போதோ சற்றுப் பொறுத்தோ நீருக்குள் மூழ்கிவிடும் ஆபத்தில் இருந்தது.
     
             'சக்கரக்குழி' அளவுகூட நிலம் இல்லாத மருதன் அந்தப் பயிரைக் காப்பாற்றத் திட்டமிடுவதும் ஊரையே திரளச் செய்வதும் இக்கதையின் உன்னத உச்சமாகும்.

    பயிர்காக்க யோசனை:
            வயல்வெளி வெள்ளக்காடானது மட்டுமன்றி, "வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து மேற்கு வடமேற்காக நகரக்கூடும். 
     
            இதன் விளைவாக அடுத்த நாற்பத்தெட்டு மணி நேரத்திற்கு நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்தமழை பெய்யக்கூடும்" என்பது போன்ற செய்திகளைக் கேட்ட மருதன், “எந்த மழையின் உதவியில் நட்டார்களோ, அதே மழையின் 'அபரிமித அன்பினால்' இப்போது பயிர் தெப்பலாடுகிறது. 
     
            ஒருநாள் நீரில் மூழ்கினால் போதும், முழுவதும் அழுகிவிடும். மறுபடி புதிதாக நாற்றுவிட்டுப் புதிய சாகுபடிதான். அதற்கு யாரால் முடியும்? என்ன செய்யலாம்?” என்று, முணுமுணுத்த மருதனுக்குள் ஆயிரம் யோசனைகள்.

    வழி தெரிந்தது மருதனுக்கு:
            ஊரைச் சுற்றி வளைந்து ஓடிவரும் மூன்று மைல் நீள வடிவாய்க்கால். அது முழுவதுமே, சுவர் வைத்துத் தடுத்ததைப் போல் காடாய் மண்டிக் கிடக்கும் காட்டாமணக்குச் செடிகள். அந்தச் செடிகளைப் பிடுங்கி எறிந்தால் போதும் ஒரே நாளில் உபரிநீர் முழுவதும் வடிந்துவிடுமே! பயிர்கள் வெள்ளநீரில் மூழ்காமல் மொத்தக் கிராமமும் தப்பித்துக்கொள்ள, வழி கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சியில் மருதன் பரவசமானான்.

    ஊரும் உதவிக்கு வந்தது:
            தன்னம்பிக்கையோடு, வடிவாய்க்காலின் ஜில்லென்ற இடுப்பளவு தண்ணீரில் தன்னந்தனியனாய் நின்றபடி, மண்டிக் கிடந்த காட்டாமணக்குச் செடிகளைப் பிய்த்து எறிந்து கொண்டிருந்தான் மருதன். மருதனுக்கு அவன் மனைவி உதவக் கைநீட்டினாள். 
     
            பின்னர், ஊரே திரண்டு வந்து காட்டாமணக்குச் செடிகளைப் பிடுங்கி எறிந்தது. வேலை இருக்கிறது என ஒதுங்கியவர்கள்கூட, மருதனுக்கு உதவி செய்ய முன்வந்தனர். ஊரே ஒன்றிணைந்ததால், வெள்ளம் குறைந்து காணாமல் போனது; பயிர்கள் பிழைத்தன.

    முடிவுரை:
    ஊரில் எவருக்கும் இல்லாத அக்கறை மருதனுக்கு இருந்ததைப் பார்க்கும்போது, பொறுப்புணர்ச்சி யின்றி இருந்த ஊர்மக்களைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்புநலம் தெளிவாகத் தெரிகிறது. ஊர்கூடித் தேர் இழுத்தால், தானாக அது சேர வேண்டிய இடத்தில் வந்து நிற்கும் அல்லவா!

    4. புயல் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்து கிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்யக் கோரி, உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளருக்குக் கடிதம் எழுதுக. 
    சார்வாய்,
    26.11.2023.
    அனுப்புநர்
                            ஊர்ப் பொதுமக்கள்
                            சார்வாய் - கிராமம்,
                            வடசென்னிமலை, 
                            ஆத்தூர் வட்டம் -636102
                            சேலம் மாவட்டம்.
    பெறுநர்
                            உதவிப் பொறியாளர்,
                            தமிழ்நாடு மின்சார வாரியம்,
                            ஆத்தூர் - 636102,
                            சேலம் மாவட்டம்.
    மதிப்பிற்குரிய ஐயா,
                            பொருள் : புயல் தாக்கத்தினால் அறுந்து கிடக்கும் மின் 
    இணைப்புகளைச் சரிசெய்யக் கோரி வேண்டுதல் விண்ணப்பம் - சார்பு.

                        வணக்கம்! எங்கள் சார்வாய் கிராமத்தில் சுமார் ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. சமீபத்தில் ஏற்பட்ட 'நிவர்' புயல் காரணமாக, எங்கள் குடியிருப்புகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டும், மின் கம்பிகள் அறுந்தும் கிடக்கின்றன. சார்வாய் கிராமம் முழுவதும் இருளில் மூழ்கிவிட்டது. போதிய மின்வசதி இல்லாமல் முதியோர், நோயாளிகள், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நேரமாதலால், படிக்க இயலாமல் மாணவ மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
                எனவே, நீங்கள் அருள்கூர்ந்து அறுந்து கிடக்கும் மின் கம்பிகளைச் செப்பனிட்டு, மீண்டும் சார்வாய் கிராமம் மின்ஒளி பெற உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
    நன்றி!
    தங்கள் உண்மையுள்ள,
    சார்வாய் கிராமத்தினர்.
    உறைமேல் முகவரி
            உதவிப் பொறியாளர்,
            தமிழ்நாடு மின்சார வாரியம்,
            ஆத்தூர் -636102,
            சேலம் மாவட்டம்.

    II. மொழியை ஆள்வோம்

    அ) மொழிபெயர்ப்புப் பகுதியைப் படித்து, இருபது ஆங்கிலச் சொற்களையும் அதன் தமிழாக்கத்தையும் எடுத்து எழுதுக.

            In 1977, shocked at the environmental devastation caused by deforestation in her beloved Kenya, Wangari Mathai founded the Green Belt Movement. For thirty years, the movement has enabled many women to plant trees in their regions providing them with food, fuel and halting soil erosion and desertification. She used the movement to enlighten the people on the fruits of representative democracy. This led Kenya to Kenya's first fully democratic elections in a generation. In the election, Mathai was elected to the Parliament and made a Minister of environment. She was conferred a Nobel Prize in 2004 because of her outstanding success in guiding Kenyan women to plant more than thirty million trees. She was transformed the lives of tens of thousands of women through sustainable social forestry schemes.

            1977ஆம் ஆண்டில் தனது உயிரினும் இனிய கென்யா நாட்டில், காடுகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு கண்டு மனம் வெதும்பி வங்காரி மத்தாய்', பசுமை வளாக இயக்கத்தைத் தோற்றுவித்தார். அதைத் தொடர்ந்து முப்பது ஆண்டுகள், இந்த இயக்கத்தால் பல ஆப்பிரிக்கப் பெண்கள், தமது பகுதிகளில் மரங்களை நட்டு, அதன் வழியாகத் தங்களுக்குத் தேவையான உணவையும் எரிபொருளையும் தாமே ஈட்டியதோடு நில்லாமல், ஆப்பிரிக்காவில் நிலவிய மண் அரிப்பால் நிலம் பாலைவனமாவதையும் தடுத்து நிறுத்தினர். அவர் இந்த இயக்கத்தின் வழியாக மக்களாட்சியின் பயன்களை அறியச் செய்தார். இது அத்தலைமுறையினர் அனைவருக்கும் முதல்முறையாகத் தேர்தலில் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இத்தேர்தலில் 'வங்காரி மத்தாய்' நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுப் பிறகு சுற்றுச்சூழல் அமைச்சரானார். கென்யப் பெண்களுக்கு வழிகாட்டி, மூன்றுகோடி மரங்களை நட்டு வளர்த்ததால், அவரது தன்னலமற்ற பணியைப் பாராட்டி, 2004ஆம் ஆண்டு வங்காரி மத்தாய்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின்மூலம், பல்லாயிரக்கணக்கான பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.

    எ-கா: Green Belt Movement பசுமைவளாக இயக்கம்
    1. Social forests - சமூகக் காடுகள்
    2. desertification - பாலைவனமாவதை / பாலைவனமாக்கல் / பாலைவனமாதல்
    3. regions - பகுதிகளில்
    4. shocked - மனம் வெதும்பி
    5. sustainable - நிலையான
    6. elected - தேர்வு செய்யப்பட்டு
    7. Plant trees - மரங்களை நடு
    8. food, fuel - உணவு, எரிபொருள்
    9. deforestation - காடுகள் அழிப்பு
    10. halting - தடுத்தல்
    11. for thirty years - முப்பது ஆண்டுகளாக
    12. movement - இயக்கம்
    13. parliament - நாடாளுமன்றம்
    14. democracy - மக்களாட்சி
    15. generation - தலைமுறையினர்
    16. Minister - அமைச்சர்
    17. thirty millions trees - மூன்று கோடி மரங்கள்
    18. out standing success - தன்னலமற்ற பணி
    19. schemes - திட்டங்கள்
    20. transformed - மறுமலர்ச்சி ஏற்படுத்தல்
     

    ஆ) மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

    எ-கா: விலை, விளை, விழை
            கார்ப் பருவத்தில் நன்றாக விளைந்ததால், தானியங்களின் விலை குறையாமல் இருக்க, ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விழைவதாக அரசு அறிவித்தது.

    1. தலை, தளை, தழை
            தழைகளைத் திரட்டிக் கயிற்றால் தளை இட்டுத் தலையில் சுமந்து சென்றான்.

    2. கலை, களை, கழை
            சிலம்பக் கலை கற்றவன், தன் கையில் ஏந்திய கழையால், தன் பகை களைந்து வெற்றிபெற்றான்.

    3. அலை, அளை, அழை
            அளையுள் இருந்த பாம்பைப் பிடிக்க, அலைந்து திரிந்து பாம்பாட்டியை அழைத்து வந்தான்.

    இ) இலக்கிய நயம் பாராட்டுக.

    வெட்டி யடிக்குது மின்னல் - கடல்
        வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
    கொட்டி யிடிக்குது மேகம் - ௬.
        கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
    சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று 
        தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
    எட்டுத்திசையும் இடிய - மழை 
        எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!
                
                                - பாரதியார்

    ஆசிரியர் குறிப்பு:

            கவிஞர், எழுத்தாளர், இதழாளர், விடுதலைப் போராட்ட வீரர், சமூகச் சீர்திருத்தவாதி என்னும் பன்முகத் தன்மை கொண்டவர் பாரதியார். அவர் கவிதையாக எழுதி வடித்த “வெட்டி அடிக்குது மின்னல்..." எனத் தொடங்கும் பாடலில் அமைந்துள்ள நயத்தைச் சற்றே ஆராய்வோம்.

    மையக்கருத்து:
            எட்டுத் திசைகளும் இடிந்து விழுவதுபோல் மழை கொட்டித் திகைப்பூட்டுகிறது என்பது இப்பாடலின் மையக் கருத்தாகும்.

    எதுகை:
            செய்யுள் அடிகளிலோ, சீர்களிலோ முதல் எழுத்து மாத்திரை அளவு ஒத்திருக்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகையாகும்.
    அடிஎதுகை:
    வெட்டி, கொட்டி, சட்ட, எட்டு
    சீர்எதுகை:
    சட்டச்சட, சட்டச்சட டட்டா 

    மோனை: 
            அடிகளிலோ சீர்களிலோ முதலெழுத்து ஒன்றி வருவது மோனையாகும்.
    சீர்மோனை:
    வெட்டி, வீரத், எட்டு, எங்கனம், சட்டச்சட, சட்டச்சட

    முரண்
    செய்யுள் அடிகளிலோ சீர்களிலோ தொடர்கள் சொல்லாலோ, பொருளாலோ முரண்பட்டு வருவது முரண்.
    அடிமுரண்:
    வெட்டி, கொட்டி
     
    சந்தம்: 
            இசையுடன் பாடும் வகையில் ஓசைநயம் அமைந்த பாடலைச் சந்தப் பாடல் என்பர். சிந்துப்பா வடிவில் அமைந்த இப்பாடல், பாடி மகிழ்வதற்கு ஏற்ற ஓசை நயத்தைப் பெற்றுள்ளதைக் கற்பார் அறிவர்.

    சுவை: 
            நம் அகக் கண்முன்னே கருத்தைக் காட்சிப்படுத்தும் இப்பாடலில், மருட்சியுடன் அச்சத்தை உணர்த்தும் 'வீரச்சுவை' பயின்று வந்துள்ளது எனலாம். “சட்டச்சட சட்டச்சட டட்டா" என்னும் சொற்களின் தொகுப்பு, வானம் எட்டுத் திசைகளில் இடிப்பதையும் மழை கொட்டுவதையும் உணர்த்தும் ஒலிக் குறிப்புச் சொற்கள் அல்லவா?

            முறுக்கு மீசை முண்டாசுக் கவிஞரின், "வெட்டி அடிக்குது மின்னல்...." எனத் தொடங்கும் பாடலில் அமைந்த எதுகை, மோனை, முரண், சந்தம், சுவை என்னும் பல நயங்கள் படிப்போரையும் பாடுவோரையும் மெய்மறக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

    ஈ) உரை எழுதுவோம்.

    உங்கள் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் தற்பொழுது மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றுகிறார். நடைபெற இருக்கும் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வர இருக்கும் அவரைப் பள்ளியின் சார்பாக வரவேற்கும் விதமாக ஒரு பக்க அளவில் வரவேற்புரை எழுதுக.
     
            அன்பான வணக்கங்கள்.
            நம் பள்ளியின் வரலாற்றில் இன்று ஒரு பொன்னாள். நம் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் ஒருவர், மாவட்ட ஆட்சியராக பதவி பெற்றிருக்கிறார். நம் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்க வரும் அவரை வரவேற்பதில் அளவிலா மகிழ்ச்சி அடைகிறது நம் பள்ளி.

            கல்வியை - கலையை அறிவை அனுபவத்தைத் தந்த தாயை, சேய் சந்திக்க வரும் தருணமிது.

        தன்னை மகத்துவமான மனிதராக்கிய பள்ளியை நினைவில் இருந்து நீங்காமல் வைத்திருக்கிற மாவட்ட ஆட்சித் தலைவரின் குணம் போற்றத்தகுந்தது.

            செல்லும் இடத்திலெல்லாம், மாவட்ட ஆட்சியர் தாம் படித்த பள்ளியைப் பற்றி தமக்குக் கற்பித்த ஆசிரியர்கள் குறித்துப் பெருமை பொங்கப் பேசுகிறாராம். ஈன்று வளர்த்த மகனைக் காணக் காத்திருக்கும் தாயைப்போல, மாவட்ட ஆட்சியரைக் காண நம் பள்ளி காத்திருக்கிறது. நம் பள்ளியோடு இணைந்து காத்திருக்கும் நாமும் அவரை இருகரம் கூப்பி வரவேற்போம்!

            நம் பள்ளி எண்ணற்ற கல்வியாளர்களை, பொறியியல் வல்லுநர்களை, மருத்துவர்களை, ஆசிரியர்களை, அரசியல்வாதிகளை உருவாக்கியுள்ளது. அந்த வகையில் நம் பள்ளியில் இருந்து தேர்ந்து உருவான மாவட்ட ஆட்சியரைப் பின்பற்றி அவரைப்போல நாமும் வாழ்வில் சிறப்படைவோம். நம் பள்ளிக்குப் பெருமை சேர்ப்போம்.

            நம் பள்ளி முன்னாள் மாணவராகிய மாவட்ட ஆட்சியர், பள்ளி ஆண்டு விழாவின் சிறப்பு விருந்தினராக வருவது, சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிவதைப் போலுள்ளது. அவரை வருக வருக என அகமும் முகமும் மலர வரவேற்போம்!

    உ) கீழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் அமைக்க.

    எ கா : வானம், பற, நிலவு, தொடு - வானத்தில் பறப்போம்; நிலவைத் தொடுவோம்.
     
    1. சருகு, விழு, மண், அலை
    விடைகுறிப்பு: 

    சருகாக விழுந்தது, விழுந்து மண்ணில் அலைந்தது.
     
    2. விண்மீன், ஒளிர், எரி, விழு
    விடைகுறிப்பு: 

    விண்மீன் ஒளிர்ந்தது; எரி நட்சத்திரம் விழுந்தது.
     
    3. குதிரை, வேகம், ஒடு, தாவு
    விடைகுறிப்பு:

    குதிரை வேகமாக, ஓடித் தாவியது.
     
    4. குழந்தை, நட, தளிர்நடை, விழு
    விடைகுறிப்பு: 

    குழந்தை நடந்தது, தளிர் நடையால் விழுந்தது.
     
    5. திரை, காண், கைதட்டல், மக்கள்
    விடைகுறிப்பு: 

    திரையில், கண்டு கைதட்டினர் மக்கள்.

    III. மொழியோடு விளையாடு

    அ) புதிருக்கேற்ற விடையை அறிக.

    அ) அடைமழை பெய்த அடுத்த நாள் 
    படைபடையாய் வந்ததாம் 
    பரங்கி நாட்டு விமானம்; 
    எதிரி சுடாமலேயே 
    இறகொடிந்து இறந்ததாம் - எது?
    விடைகுறிப்பு : 

    ஈசல்

    ஆ) தண்ணீரும் மழையும் இல்லாமல் 
    பயிர் பச்சையாய் இருக்கிறது; 
    பாக்கு வெற்றிலை போடாமலே, 
    வாய் சிவப்பாய் இருக்கிறது? - எது?
    விடைகுறிப்பு : 

    பச்சைக்கிளி

    ஆ) எண்ணங்களை எழுத்தாக்குக.


    மெல்ல உருகும் பூமி! 
    பனிப்பாறையைக் கரைக்கிறது வெப்பம்! 
    அதீதமாய் புகை கக்கும் வாகனங்கள் 
    ஒசோனைத் துளைக்கும் மாசுக்காற்று 
    வெப்பத்தைத் தூண்டும் மனிதன் 
    மரத்தை வெட்டி அழிவைத் தேடுகிறான் 
    இடைவிடாது வெட்டுகிறான் மரங்களை 
    எப்போது தெளிவான் மனிதன்? 
    மெல்ல உருகுது பூமி!

    இ) கடிதம் எழுதுக.

    மழை பெய்யும்போது, மின்கம்பங்கள், மரங்கள், குளம், குட்டை, ஏரி, ஆறு ஆகியனவற்றிற்கு அருகில் செல்லாதிருத்தல், வெளியில் செல்லும்போது காலணி அணிதல், கொதிக்க வைத்த நீரையே பருகுதல், வானிலை அறிக்கைகளைப் பின்பற்றுதல், அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தல் போன்ற மழைக்காலப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்குப் பள்ளித் தலைமையாசிரியரிடம் அனுமதி கேட்டுக் கடிதம் எழுதுக.

    வழங்குதல்
                            அ. பவன்குமார்,
                            பன்னிரண்டாம் வகுப்பு,
                            அரசு மேனிலைப்பள்ளி,
                            திருச்சி.
    பெறுதல்
                            தலைமையாசிரியர்,
                            அரசு மேனிலைப்பள்ளி,
                            திருச்சி.
    மதிப்பிற்குரிய ஐயா,
                            பொருள்: மழைக்காலத்திற்கான விழிப்புணர்வை மாணவர்களுக்கு                             ஏற்படுத்துதல் - தொடர்பாக.

            வணக்கம்! நமது பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு 'இ' பிரிவில் பயிலும் மாணவன் நான். பள்ளியின் மாணவர் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இனி மழைக்காலம் தொடங்க உள்ளது. மழையின் பொழிவைப் பொறுத்துப் பள்ளியின் விடுமுறை அமையும். மாணவச் சகோதரர்கள் எதிர்வரும் மழைக்காலத்தில் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் எப்படி முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை அறிய அறிவுறுத்த விரும்புகிறோம்.

                மழைப்பொழிவின்போது மின்கம்பங்கள், மரங்கள், குளம், குட்டை, ஏரி, ஆறு ஆகியவற்றிற்கு அருகில் செல்லாதிருத்தல், வெளியில் செல்லும்போது காலணி அணிதல், சூடான நீரையே பருகுதல், வானிலை அறிக்கைகளை உற்றுநோக்கி அறிந்து பின்பற்றுதல், அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தல் போன்ற மழைக்காலப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மாணவ நண்பர்களுக்கு ஒரு விழிப்புணர்வுக் கூட்டம் நடத்த ஆவன செய்யும்படி தங்களைப் பணிந்து கேட்டுக் கொள்கின்றேன்.
    நன்றி.
    தங்கள் உண்மையுள்ள,
    அ. பவன்குமார்,
    பன்னிரண்டாம் வகுப்பு.
    நாள்: 27.11.2023,
    இடம் : திருச்சி.

    ஈ) செய்து கற்போம். 

    உங்கள் பகுதியில் பயன்படுத்துகின்ற இருபது வட்டார வழக்குச் சொற்களைத் தொகுத்து வகுப்பில் காட்சிப்படுத்துக.
     

    IV. நிற்க அதற்குத் தக.

    அ) அது ஒரு மழைக்காலம். அதிகளவு மழையினால் வெள்ளம் வரக்கூடிய நிலை குறித்து அரசு அறிவிப்பு வெளியாகிறது. அரசின் துண்டறிக்கை உங்கள் கையில்..... 

    அ) எச்சரிக்கை நடவடிக்கைகள்:
    • வெள்ள நீருக்கு அருகே வரவோ, வெள்ளநீரில் விளையாடவோ கூடாது.
    • ஏரிக்கரை மற்றும் ஆற்றோரச் சாலைகளில் நடப்பதைத் தவிர்க்கவும்.
    • வடிகால்கள், வாய்க்கால்கள், கழிவுநீர்த் தொட்டிகள் போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
    • வெள்ளநீரில் பாம்புகள் மிதந்து வரும் அபாயம் இருப்பதால், முன்னெச்சரிக்கையாய்க் கைகளில் கொம்புடன் (தடியுடன்) இருங்கள்.
    • உங்கள் வீட்டில் உள்ள கழிப்பிடத் துளை மற்றும் குளியலறைத் துளைமீது மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, தெருவில் ஓடும் வெள்ள நீர் மற்றும் கழிவுநீர் வீட்டிற்குள் புகாதபடி செய்யுங்கள்.
    • அறுந்த மின்கம்பிகள்மீது காலை வைக்காதீர்கள்.
    • மின் சாதனங்கள், எரிவாயுப் பொருள்கள் பழுதுபட்டிருந்தால், அவற்றைப் பயன்படுத்தாதீர்கள்.
    • ஏனெனில் அவற்றின் வழியாக மின்சாரம் தாக்கி, மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.
    ஆ) சுகாதார நடவடிக்கைகள்:
    • கொதிக்க வைத்த நீரையே அருந்துங்கள்.
    • மூடிவைக்கப்பட்டுள்ள, சமைத்த சூடான உணவுகளையே உண்ணுங்கள்.
    • வயிற்றுப்போக்கு இருந்தால், அரிசிக்கஞ்சி, இளநீர், பால் கலக்காத தேநீர், மோர் பருகலாம்.
    • அங்கன்வாடி, சுகாதாரப் பணியாளர்களை அணுகி, உப்பு, சர்க்கரைக் கரைசல் பொட்டலங்களை வாங்கி அதைக் குடிக்கலாம்.
    • சுற்றுப்புறத் தூய்மையைப் பாதுகாக்க, பிளீச்சிங்பவுடர், சுண்ணாம்புத்தூளைப் பயன்படுத்தவும்.
    மேற்கண்ட குறிப்புகளைப் படித்த நீங்கள் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு எவ்வாறு உதவுவீர்கள்?
    • குறிப்புகளைப் படித்துள்ள காரணத்தால், விழிப்புணர்வோடு நடந்துகொள்வேன்.
    • அத்துடன் இவற்றை அறியாதவர்களுக்குத் தெளிவாக எடுத்துக்கூறி, வழிகாட்டியும் உதவுவேன்.

    ஆ) படிப்போம், பயன்படுத்துவோம்!

    Museum - அருங்காட்சியகம்
    Archive - ஆவணக்காப்பகம்
    Hardware - வன்பொருள்
    Software - மென்பொருள்

    இ) அறிவை விரிவு செய்.

    ஒரு பார்வையில் சென்னை நகரம் - அசோகமித்திரன்
    சுற்றுச்சூழல் கல்வி - ப. ரவி
    தமிழ் நடைக் கையேடு - மொழி வெளியீடு
    கறுப்பு மலர்கள் - நா. காமராசன்
    சென்னப்பட்டணம் -ராமச்சந்திர வைத்தியநாத்
    வானம் வசப்படும் - பிரபஞ்சன்


     
     
     
     

     
     
     
     

     

     






    0 Comments:

    Post a Comment

    Recent Posts

    Total Pageviews

    Code

    Blog Archive