பீஸ்' கட்டலையா? 'ஆன்லைன்' வகுப்பு ரத்து! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, November 18, 2020

பீஸ்' கட்டலையா? 'ஆன்லைன்' வகுப்பு ரத்து!

'

 சென்னை:கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களின், 'ஆன்லைன்' வகுப்புகளை, தனியார் பள்ளிகள் ரத்து செய்வதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, பள்ளி, கல்லுாரிகள் இன்னும் திறக்கப்பட வில்லை. இரண்டு முறை பள்ளிகள் திறப்புக்கான தேதி அறிவித்தும், அதை அரசு ரத்து செய்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, தனியார் பள்ளிகள், ஆன்லைன் வழியில் பாடங்களை நடத்துகின்றன.

அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி, 'டிவி' வழியே பாடங்கள் நடத்தப்படுகின்றன.தனியார் பள்ளிகளில், மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூல் செய்வதற்கு, அரசும், நீதிமன்றமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், தங்கள் விருப்பப்படி கட்டணம் வசூலிக்கின்றன.கடந்த ஆண்டு கட்டணத்தில், 75 சதவீதத்தை மட்டுமே, இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பல பள்ளிகள், 100 சதவீத கட்டணத்தை வசூலித்துள்ளன. அவற்றுக்கு பள்ளி கல்வி அதிகாரிகள், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவ கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்து, பல பள்ளிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளன. இது குறித்து, பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் பலர் கூறியதாவது:கொரோனா கட்டுப்பாடுகள், சில வாரங்களாக முழுமையாக தளர்த்தப்பட்டு, பொருளாதார நிலை முன்னேறி வருகிறது.இனிமேல் தான் பெற்றோருக்கு வருவாய் கிடைக்கும். ஆனால், பள்ளிகள் இதை புரிந்து கொள்ளாமல்,மாணவர்களின் கல்வியை பாதிக்குமாறு நடவடிக்கை எடுக்கின்றன. இது, சரியான நடைமுறை அல்ல.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Post Top Ad