குரு பார்க்கக் கோடி நன்மை! குரு பெயர்ச்சி 2020 பலன்கள் என்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்: - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, November 10, 2020

குரு பார்க்கக் கோடி நன்மை! குரு பெயர்ச்சி 2020 பலன்கள் என்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்:



நவம்பர் 15-ம் தேதி குரு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். அவர் ஜன்மம், 4, 6, 8 ஆகிய இடங்களில் நிலைகொள்ளும் ராசிக்காரர்களுக்கு அசுப பலன் ஏற்படுமோ என்று மனச் சஞ்சலம் எழலாம். அது தேவையில்லை. ஜனன ஜாதகத்தில் கிரக நிலைகளின்படி சுப பலன்களும் ஏற்படலாம். மேலும் குருபகவானின் பார்வைக்கு அதிக பலம் உண்டு; பலன் உண்டு. அவ்வகையில் இந்தப் பெயர்ச்சியில் 12 ராசிகளுக்கும் குரு பார்வை பலன்கள் எப்படி என்பதை அறிந்துகொள்வோமா?

மேஷம்: 

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களுக்கு ஏற்படுகிறது. 2-ம் இடமாகிய தன, குடும்ப ஸ்தானத்துக்கு குருவின் பார்வை ஏற்படுவதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பேச்சாற்றல் வெளிப்படும். சவாலான காரியங்களையும் சாதுர்யமாகப் பேசி முடித்துக் காட்டுவீர்கள். தாயாருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வீடு கட்டுவதற்கான சூழ்நிலை கனிந்து வரும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வேறு வசதியான வீட்டுக்கு மாறுவர். 6-ம் இடத்து குருவின் பார்வை, கடன் தொல்லைகளில் இருந்து விடுவிக்கும். வராமல் இருந்த கடன் தொகை திரும்ப கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் குரு இருப்பதால், அலுவலகப் பணிகளில் இறுக்கமான சூழ்நிலை ஏற்படும். செவ்வாய்க்கிழமைகளில் குரு ஓரையில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.

ரிஷபம்:

ரிஷபராசியில் பிறந்தவர்களுக்கு குருவின் பார்வை ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய இடங்களுக்கு ஏற்படுகிறது. உங்கள் ராசியைப் பார்ப்பதால் இதுவரை இருந்து வந்த சோர்வான மனநிலை மாறி, உற்சாகமாகச் செயல்படுவீர்கள். கடன் சுமை குறைவதற்கான வாய்ப்பு ஏற்படும். நினைத்த காரியங்களை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். மூன்றாம் இடத்தைப் பார்ப்பதால் துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். வீண் அச்சங்களில் இருந்து விடுபடுவீர்கள். இளைய சகோதர வகையில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். அவர்கள் மூலம் ஆதாயம் பெறுவதற்கும் வாய்ப்பு உண்டு. குருவின் பார்வை பூர்வபுண்ணிய மற்றும் புத்திரஸ்தானத்துக்கு ஏற்படுவதால், பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கவும், அவர்கள் மூலம் பணவரவு மற்றும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு ஏற்படும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். தடைப்பட்டு வந்த திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். பணியிடத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும்.

குரு உங்கள் ராசிக்கு பாக்கியஸ்தானமான 9-ம் வீட்டில் இருப்பதால் நற்பலன்களே ஏற்படும். வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட, நற்பலன்கள் அதிகரிக்கும்.

மிதுனம்: 

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு குருபகவான் எட்டில் அமர்ந்து அஷ்டம குருவாகிறார். ஆனாலும், அதற்காக அச்சப்படத் தேவையில்லை. காரணம் அவருடைய பார்வைகள் பல வகைகளிலும் அனுகூலப் பலன்களையே தரும். குருபகவான் உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களைப் பார்வை செய்கிறார். அவருடைய 2-ம் இடத்துப் பார்வையின் பலனாக பொருளாதார வசதி மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைத்திருக்கும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். 4-ம் வீட்டுக்கு ஏற்படும் குருவின் பார்வையின் மூலம் தாயார் மூலம் சொத்துச் சேர்க்கை உண்டாகக்கூடும். வீடு கட்ட மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறும். பிரச்னைகள் முடிவுக்கு வரும். வெளியுலகில் பெயரும் புகழும் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும். குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்வை செய்வதால் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். செலவுகள் அதிகரித்தாலும் சுபச் செலவாக இருப்பது மகிழ்ச்சி தரும். வீட்டில் ஹோமம் போன்ற தெய்வ வழிபாடுகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

குருபகவான் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமான போக்கு தேவை. வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு அர்ச்சனை செய்தால் நிம்மதி உண்டாகும்.

கடகம்:

கடகராசியில் பிறந்தவர்களுக்குக் குரு பகவானின் பார்வை 1, 3, 11 ஆகிய இடங்களுக்கு ஏற்படுகிறது. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஏற்படுவதால், மனக் குழப்பங்கள் நீங்கி, தெளிவாகச் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். உடல்நலம் சீராகும். மருத்துவச் செலவுகளும் ஏற்படாது. சோர்ந்த மனநிலை மாறி சுறுசுறுப்பாகச் செயல்பட்டு தடைப்பட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். தைரிய ஸ்தானமாகிய 3-ம் வீட்டைப் பார்ப்பதால் மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். எதிர்ப்புகளைக் கடந்து முன்னேறுவீர்கள். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் பதிவதால், பணப் புழக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகம், தொழில் ரீதியாக அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகள் பெரிதும் பாராட்டப் படுவதுடன் சலுகைகளும் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தடைப்பட்டு வந்த வெளிநாட்டுப் பயணம் கைகூடும்.

குருபகவான் 7-ம் வீட்டில் இருப்பதால் பிரச்னைகள் எதுவும் இருக்காது. நன்மைகள் கூடுதலாக நடைபெற திங்கள்கிழமைகளில் சிவபெருமானை நெய்தீபம் ஏற்றி வழிபடலாம்.

சிம்மம்: 

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்குக் குருபகவானின் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களுக்கு ஏற்படுகிறது. குடும்பம் மற்றும் வாக்குஸ்தானமாகிய 2-ம் இடத்தில் பதியும் குருவின் பார்வையானது, குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள், கவலைகள் ஆகியவற்றை போக்கி, உற்சாகமும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கச் செய்யும். பணப்புழக்கம் அதிகரிக்கும். முக்கியஸ்தர்களின் தொடர்பால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். திருமண முயற்சிகள் சாதகமாகும். குருபகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடினாலும் உற்சாகமாகச் செய்து முடிக்கும் ஆற்றல் பிறக்கும். பணியிடத்தில் உங்கள் கௌரவம் உயரும். பாராமுகமாக இருந்த அதிகாரிகள் உங்களிடம் அனுசரனையாக நடந்துகொள்வார்கள். 12-ம் இடத்துக்கு ஏற்படும் குருவின் பார்வையானது சுபச்செலவுகள் அதிகரிக்கச் செய்யும். தெய்வபக்தி மேலோங்கும். நீண்டநாள்களாகச் செல்ல நினைத்திருந்த புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும்.

குரு ருண ரோக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும். சிரமங்கள் நீங்க, தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் குருபகவானுக்கு நெய்தீபம் ஏற்றி வரவும்.

கன்னி:

கன்னிராசியில் பிறந்தவர்களுக்கு 1, 9, 11 ஆகிய இடங்களுக்கு குருபகவானின் பார்வை ஏற்படுகிறது. ஜன்ம ராசியில் பதியும் குருவின் பார்வை உங்களுக்கு பல வகைகளிலும் அனுகூலப் பலன்களைத் தருவதாகவே இருக்கும். குடும்பத்தில் மனநிம்மதி தரும் சூழ்நிலை ஏற்படும். உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும். பாக்கியஸ்தானமாகிய 9-ம் இடத்துக்கு குருவின் பார்வை ஏற்படுவதால், தந்தையின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அவர் மூலம் ஆதாயம் பெறவும் வாய்ப்பு ஏற்படும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளைச் சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்வீர்கள். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குருபகவான் 11-ம் இடத்தைப் பார்ப்பதால், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். தடைப்பட்டு வந்த பதவி உயர்வு கிடைக்கக்கூடும். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் உற்சாகத்துடன் செயல்பட வைக்கும். சொந்த பந்தங்களுடன் குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

ஐந்தில் குரு கெஞ்சினாலும் கிடைக்காது என்று ஒரு ஜோதிடப் பழமொழி உள்ளபடியே வாழ்க்கைத் தரம் உயரும். புதன்கிழமைகளில் மகாவிஷ்ணுவை வழிபட நன்மைகள் கூடும்.

துலாம்: 

உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டமத்தில் சஞ்சரிக்கும் குருபகவான், 8,10, 12 ஆகிய இடங்களைப் பார்வை செய்கிறார். குருபகவான் 8-ம் இடத்தைப் பார்ப்பதால் வெளிநாட்டில் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு லட்சியத்தை அடைவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் சோர்வு ஏற்பட்டாலும் ஆதாயமும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குருவின் 10-ம் இடத்துப் பார்வையானது வேலை இல்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். பணியிடத்தில் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும். சக ஊழியர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். சலுகைகள் கிடைக்கும். குருவின் 12-ம் இடத்துப் பார்வையானது செலவுகளை ஏற்படுத்தினாலும் சுபச் செலவுகளாக இருப்பதால் மகிழ்ச்சியாகவே இருப்பீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழ்நிலை ஏற்படும். ஆலயத் திருப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.

அர்த்தாஷ்டம குருவினால் ஏற்படக்கூடிய அசுப பலன்கள் குறைவதற்கு, வியாழக்கிழமைகளில் ஸ்ரீராகவேந்திரர், ஷீர்டி ஸ்ரீசாயிபாபா என மகான்களை வழிபடுவது நலம் தரும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்குக் குருபகவானின் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களுக்கு ஏற்படுகிறது. குருபகவானின் பார்வை களத்திரஸ்தானமாகிய 7-ம் இடத்துக்கு ஏற்படுவதால் கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். பணியின் காரணமாகப் பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேரும் வாய்ப்பு கனிந்து வரும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒருபடி உயரும். பாக்கிய ஸ்தானமாகிய 9-ம் வீட்டுக்கு ஏற்படும் குரு பார்வையின் பலனாக தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கி உறவு சுமுகமாகும். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கக்கூடும். தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குரு 11-ம் வீட்டை பார்வை செய்வதால் எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சகோதர வகையில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புகளின் மூலம் பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள், உறவுகளால் நன்மை உண்டாகும்.

குருவினால் நன்மைகள் அதிகரிக்க, செவ்வாய்க்கிழமைகளில் குரு ஓரையில் குருபகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரவும்.

தனுசு: 

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்குக் குருவின் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களுக்கு ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு அதிபதியான குருபகவானின் பார்வை ருண, ரோக, சத்ரு ஸ்தானத்துக்கு ஏற்படுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும். மருத்துவச் செலவுகள் குறையும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். வழக்குகளில் நல்ல திருப்பம் உண்டாகும். ஆயுள் ஸ்தானமாகிய 8-ம் வீட்டுக்குக் குருவின் பார்வை ஏற்படுவதால், வெளிநாடு செல்வதில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும். பயணங்களால் பண லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடலில் ஏதேனும் பெரிய நோய் இருக்கிறதோ என்பது போன்ற பிரமைகள் நீங்கி உற்சாகமாக இருப்பீர்கள். நண்பர்கள், உறவுகளால் நன்மை உண்டாகும். குரு பகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் படித்து முடித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வுக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். புதிய பொறுப்புகளும் கௌரவப் பதவிகளும் தேடி வரும்.

குருபகவானின் அருள் பூரணமாகக் கிடைக்க, பிரதோஷ வேளையில் சிவாலயத்தில் நெய்தீபம் ஏற்றி, சிவபுராணம் படித்து வழிபடவும்; நன்மைகள் உண்டாகும்.

மகரம்: 

குரு பகவான் உங்களுடைய ராசியில் அமர்ந்துகொண்டு 5,7,9 ஆகிய இடங்களைப் பார்வை செய்கிறார். புத்திர ஸ்தானத்துக்கு குரு பார்வை ஏற்படுவதால் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் ஏற்படும். பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் சுமுகமாக முடிந்து உங்களுக்குச் சேர வேண்டிய பங்கு வந்து சேரும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். குருவின் பார்வை 7-ம் வீட்டுக்கு ஏற்படுவதால் கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவுகளிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். வாழ்க்கைத்துணையால் உங்கள் அந்தஸ்து உயரும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களிடையே உங்களைப் பற்றி இருந்து வந்த தவறான அபிப்பிராயங்கள் நீங்கும். 9-ம் இடத்துக்கு ஏற்படும் பார்வையின் பலனாக பணப்புழக்கம் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். தந்தையுடன் சுமுகமான உறவு ஏற்படும். தந்தையின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மாதம்தோறும் உங்கள் ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில், குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் சிரமங்கள் அறவே நீங்கும்.

கும்பம்:

உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் குருபகவான் 4, 6, 8 ஆகிய வீடுகளை பார்வை செய்கிறார். 4-ம் வீட்டுக்கு ஏற்படும் அவருடைய பார்வையின் பலனாக உடல் ஆரோக்கியம் மேம்படும். தாயாரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். தாய்வழியில் பணவரவுக்கும் சொத்துச் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வீடு கட்டுவதில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். குருபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், உறவுகளிடையே இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கடன்களால் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். உங்களைப் பற்றி மற்றவர்கள் கொண்டிருந்த தவறான அபிப்பிராயங்கள் நீங்கும். குருபகவான் 8-ம் இடத்தைப் பார்ப்பதன் மூலம் ஆயுள் பலம் கூடும். நீண்டநாள் நிலுவையில் இருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உங்கள் திறமைகள் பளிச்சிடும். வெளிவட்டாரத்தில் பெயரும் புகழும் பெறும் வாய்ப்பு ஏற்படும். மன பிரமைகள் நீங்கி மனத்தில் தெளிவு பிறக்கும்.

வியாழக்கிழமைகளில் ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்துக்குச் சென்று துளசி மாலை அணிவித்து வழிபட்டு வருவது நலம் சேர்க்கும்.

மீனம்:

லாப வீட்டில் இருக்கும் குரு பகவானின் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களுக்கு ஏற்படுகிறது. குருபகவானின் பார்வை 3-ம் இடமான தைரிய ஸ்தானத்துக்கு ஏற்படுவதால், மனத்தை வாட்டிக் கொண்டிருந்த வீண் கவலைகள் நீங்கி தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் உங்கள் திறமை பளிச்சிடும். இளைய சகோதரர்கள் மூலம் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குரு பகவானின் பார்வை பூர்வபுண்ணிய ஸ்தானத்துக்கு ஏற்படுவதால், பூர்வீகச் சொத்துகள் கைக்கு வரும். பிள்ளைகளின் திருமணம், உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாகும்.வெளிநாட்டில் இருக்கும் பிள்ளை அல்லது பெண்ணின் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் பரிபூரண ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும்.

வியாழக்கிழமைகளில் சிவபெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி, வில்வ தளத்தால் அர்ச்சனை செய்து வந்தால் நற்பலன்கள் பல மடங்கு அதிகரிக்கும்.

Post Top Ad