விழுப்புரத்தில் நாளை மறுநாள் (பிப்.5) தனியார் வேலைவாய்ப்பு முகாம்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. வளாகத்தில் நடக்கிறது


விழுப்புரத்தில் நாளை மறுநாள் (பிப்.5) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் வேலைவாய்ப்பு பிரிவு மற்றும் விழுப்புரம் மண்டல மையம் உறுப்பு சமுதாய கல்லூரி இணைந்து வேலைவாய்ப்பற்ற இளைஞர் களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இம்முகாம் நடைபெற உள்ளது.

ஒரே மாதத்தில் பயனடைந்த 5,490 பேர்

எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு பயின்றோர் வரை என விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பல்வேறு கல்வித்தகுதிகளை கொண்ட 1,46,136 பெண்கள் உட்பட 2,89,329 பேர் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

தமிழக அரசால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமும், காலாண்டிற்கு ஒருமுறை பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் மட்டும் தமிழக அளவில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் வாயிலாக 5,490 பேர் பணி நியமனம் பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இம்முகாமில் 60க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயக்குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் வர வேண்டும். இம்முகாமில் பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் வேலையளிக்கும் நிறுவனங்கள் பணியாளர்கள் தேவை குறித்த முழுமையான விவரங்களை 'www.tnprivatejops.tn.gov.in' என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி, முன்பதிவு செய்யலாம். இம்முகாம் குறித்த கூடுதல் விவரங்களை அறிய, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04146- 226417 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை ஆட்சியர் அண்ணாதுரை செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive