கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சர்வதேசப் பொருளாதாரச் சூழல் உட்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்தது. ஆகஸ்ட் 7-ம் தேதி 43,000 ரூபாயைத் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது.
இந்த நிலையில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முற்படும் ஆய்வின் ஆரம்பத் தரவுகளின் அடிப்படையில், கோவிட்-19 தொற்றை தடுக்க கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசி 90% செயல்திறன் கொண்டது என ஃபைசர் (Pfizer) நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று இந்தியச் சந்தையில் சரிந்தன.
இன்றைய நிலையில், 10 கிராம் தங்கத்தின் விலை 5% குறைந்து, அதாவது, 2,500 ரூபாய் குறைந்து 49,659 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 6% குறைந்து, ஒரு கிலோ வெள்ளிக்கு 4,000 ரூபாய் குறைந்து, 61,384 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனையிலிருந்து வெற்றிகரமான ரிசல்ட்டைக் காண்பிக்கும் முதல் இரு மருந்து தயாரிப்பாளர்கள் `Pfizer inc' மற்றும் ஜெர்மன் நிறுவனமான `BioNTech SE' ஆவார்கள்.
``இன்றைய நாள் மனித குலத்துக்கும் அறிவியலுக்கும் சிறந்த நாள். காரணம், கோவிட்-19 நோய்க்கான தடுப்பு மருந்துக்கான மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. அது இம்மருந்து கோவிட்-19 தொற்றைத் தடுக்கும் திறன் வாய்ந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது. மருந்தின் பாதுகாப்பு தன்மையும் உறுதி செய்யப்பட்டதால், அமெரிக்காவில் அவசரத் தேவைகளுக்கு இம்மருந்தைப் பயன்படுத்த இம்மாத இறுதிக்குள் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்று ஃபைசர் நிறுவன தலைமை அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா தன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இனிவரும் நாள்களில் கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்துகள் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் செய்திகள் வெளிவருவதைப் பொறுத்து, தங்கம், வெள்ளி விலைகள் இன்னும்கூட குறைய வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தங்கம் விலை உயர்ந்ததால், அதை வாங்காமல் இருந்த பலரும் இனி கொஞ்சம் கொஞ்சமாக வாங்கத் தயங்க மாட்டார்கள் என்பதே இப்போதிருக்கும் நிலை!