நாசா ராக்கெட்டில் பறக்கும் சிறிய சாட்டிலைட்:கரூர், கோவை கல்லூரி மாணவர்கள் சாதனை:


 கரூர்:கல்லுாரி மாணவர்கள் கண்டுபிடித்த சிறிய செயற்கைக்கோள், நாசா விண்வெளி தளத்தில் ஏவப்பட உள்ளது.

கரூர், தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில் பி.எஸ்ஸி., இயற்பியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அட்னான், அருண் மற்றும் கோவை தனியார் பொறியியல் கல்லுாரியில், இ.சி.இ,, இரண்டாம் ஆண்டு படிக்கும், கரூர் மாவட்டம் தென்னிலையை சேர்ந்த கேசவன் ஆகியோர் இணைந்து, சிறிய செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர். தற்போது, நாசா விண்வெளி தளத்தில் இருந்து, இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது.

தொடர்ந்து ஆராய்ச்சி

இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது: 
நாசா விண்வெளி மையம் மற்றும் ஐ டூலேனிங் அமைப்பு இணைந்து, 'க்யூப் இன் ஸ்பேஸ்' என்ற விண்வெளி ஆராய்ச்சி போட்டிகளை நடத்தி வருகிறது. இதில், 73 நாடுகளை சேர்ந்த, 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன், இந்த போட்டியில் பங்கேற்ற போது, இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டவில்லை.

தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்ததால், இரும்பை விட, 100 மடங்கு வலுவான, கிராபோன் பாலிமர் மெட்டிரீயல் மூலம், 64 கிராம் எடை, 3 செ.மீ., சுற்றளவில் வடிவமைக்கப்பட்ட, புதிய செயற்கைக்கோள் வடிவமைத்தோம். உலகிலேயே மிகச்சிறிய செயற்கைகோளான, இதற்கு 'இண்டியன் சார்ட்' என, பெயரிடப்பட்டுள்ளது. 
இதற்கு தேவையான, 3.3 வோல்ட் மின் சக்தியை செயற்கைகோளின் மேற்புறத்தில் உள்ள, சோலார் செல்களில் இருந்து பெறமுடியும். இதில், 13 சென்சர் பொருத்தப்பட்டு இருப்பதால், விண்வெளியில் இருந்து, பல வகையாக தகவல்களை அறியலாம். ராக்கெட்டில் ஏற்படும் காஸ்மிக் கதிர்களின் தன்மை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

கருவி தேர்வு

கருவிக்கான ஆராய்ச்சி கடந்த, 2018ல் தொடங்கப்பட்டு, 2020ல் முடிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு ஸ்பேஸ் கிட்ஸ் இண்டியா நிறுவனம், அரசு கல்லுாரி இயற்பியல் துறை பேராசிரியர்கள் உதவியுடன், க்யூப் இன் ஸ்பேஸ் போட்டியில் கலந்து கொண்டோம். இதில், நாசா மூலம் விண்வெளியில் செலுத்த, இந்த கருவி தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும், 2021 ஜூன் மாதம் நாசா விண்வெளி தளத்தில் இருந்து, எஸ்.ஆர்.,- 7 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு 'இண்டியன் சார்ட்' செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive