உடம்பா... ரப்பரா? யோகாவில் அசத்தும் பள்ளி மாணவி

யோகா என்பது நமது பண்டைய நடைமுறைகளில் ஒன்றாகும். உடல் ஆரோக்கியம், சுவாச பிரச்னை, மன அமைதி போன்றவை பேணுவதற்கு பயன்படுகிறது. ஆனால், இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் யோகா செய்வதில்லை. இவர்களுக்கு பாடம் எடுக்க வந்துள்ளார், ஏழாம் வகுப்பு மாணவி.

மங்களூரு, நாகோரி பகுதியை சேர்ந்த பிரவீன் நேரி டிசோசா - வினிதா டிசோசா தம்பதிக்கு பிறந்தவர் பிரன்சிதா வின்னே டிசோசா. இவர் அப்பகுதியில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கில மேல்நிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுவயதில் இருந்தே யோகா மீது ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. அந்த ஆர்வத்தை வெளிகாட்டுவதற்கு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, யோகா வகுப்பில் சேர்ந்து உள்ளார். ஆரம்ப காலத்திலேயே கஷ்டமான ஆசனங்களை கூட, மிக சுலபமாக செய்து காண்பித்து உள்ளார். இதை பார்த்த, அவரது யோகா ஆசிரியை கவிதா அசோக் அசந்து போனார்.

இவரிடம் ஒளிந்துள்ள திறமையை அடையாளம் கண்டு, சிறப்பு பயிற்சியை அளிக்க துவங்கி உள்ளார். படிப்படியாக கஷ்டமான ஆசனங்களை கற்றுக் கொண்ட சிறுமி, யோகாவில் சாதனை படைக்க தொடர் முயற்சிகளில் ஈடுபட்டார். இதன் விளைவாக, யோகா நித்ராசானா எனும் கஷ்டமான ஆசனத்தை குறுகிய காலத்தில் கற்று கொண்டுள்ளார்.

இதை 40 நிமிடங்கள் தொடர்ந்து செய்து காட்டி சாதனை படைத்தார். சிறிய வயதிலேயே இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தார். பெற்றோர், ஆசிரியர்கள், ஊர் மக்கள் என பல தரப்பினரும் பாராட்டியதால் திக்குமுக்காடி போனார்.

இந்த ஆசனத்தை செய்வதற்கு மன உறுதி, உடல் வலிமை இரண்டும் தேவைப்படும். இதை கட்டுப்படுத்தினால் மட்டுமே, ஆசனத்தை நீண்ட நேரம் செய்ய முடியும் என சிறுமியின் யோகா ஆசிரியர் கூறினார். இது உடம்பா... ரப்பரா என்று கேட்கும் அளவுக்கு சிறுமி சாதனை படைத்து வருகிறார்





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive