பள்ளிப் பரிமாற்றத் திட்டம்!!
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளிப் பரிமாற்றத் திட்டம் சார்பில் கிராமப்புற பள்ளிகளை நகர்ப்புற பள்ளிகளுடன் இணைக்கும் நோக்கில் கொண்டபெத்தான் நடுநிலைப்பள்ளி மாணவ/வியர் ஆண்டார் கொட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளியை பார்வையிட்டனர். இந்நிகழ்விற்கு ஆண்டார் கொட்டாரம் தலைமையாசிரியர் முனியாண்டி தலைமை வகித்தார். கொண்டபெத்தான் தலைமையாசிரியர் தென்னவன் ஆசிரியப் பயிற்றுநர் உமா முன்னிலை வகித்தனர். ஆசிரியை ஜமிலா வரவேற்றார். ஆண்டார் கொட்டார பள்ளி குழந்தைகள் கொண்டபெத்தான் பள்ளி குழந்தைகளை கைகுலுக்கி வரவேற்றனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டற. இரு பள்ளி மாணவ/வியர் ஒருவருக்கொருவர் தங்கள் பள்ளிகள் குறித்து கலந்துரையாடினர். ஆண்டார் கொட்டாரம் பள்ளியிலுள்ள ஆய்வகம், நூலகம், கணினி அறை, ஒலி ஒளி கண்காட்சி வகுப்பறை , மூலிகைத் தோட்டம், பல வகையான மரங்கள் அமைந்த தோட்டம் முதலியவற்றைப் பார்வையிட்டனர். மேலும் களப்பயணமாக பள்ளிக்கு அருகிலுள்ள அம்மா பூங்கா, மாநகராட்சி கழிவு நீர் வெளியேற்றும் அலுவலகம், கழிவு நீரேற்று தொழிற்சாலை முதலியவற்றை பார்வையிட்டனர். மாணவி சத்யா கூறும் போது,
" பள்ளிப் பரிமாற்றுத்திட்டம் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அரசு உயர்நிலைப் பள்ளியிலுள்ள வசதிகளை பார்த்து வியப்படைந்தேன். களப்பயணம் எனது அறிவை விரிவு செய்கிறது. இத்திட்டம் மிகுந்த பயனைத் தருகிறது என்றார். திட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் தீபா கிறிஸ்டபெல், ஜெருசா மெர்லின், சிந்தாதிரை ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.