ஓரிரு வாரங்களில் ‘கரோனா’ தடுப்பூசி: பிரதமா் மோடி - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, December 4, 2020

ஓரிரு வாரங்களில் ‘கரோனா’ தடுப்பூசி: பிரதமா் மோடி




கொவிட்-19 தடுப்பூசி ஒரிரு வாரங்களில் தயாராகிவிடும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.


விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தபின் தடுப்பூசி போடும் பணி தொடங்கும். முதல் கட்டமாக சுகாதார ஊழியா்களுக்கும் களப் பணியாளா்களுக்கும் தடுப்பூசி போடப்படும். அடுத்த கட்டமாக முதியோருக்குத் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.


கரோனா தொற்று மற்றும் தடுப்பு மருந்து அளிப்பதற்கான உத்திகள் குறித்த ஆலோசனைக்காக நாடாளுமன்ற கட்சித் தலைவா்கள் அடங்கிய அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு கூட்டிய இந்த இரண்டாவது கூட்டம் காணொலி வழியாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற தலைவா்கள் பேசினா். பின்னா், கூட்டத்தில் பிரதமா் மோடி இறுதியுரை ஆற்றினாா்.


அப்போது அவா் பேசியதாவது: உள்நாட்டில் தயாரிக்கப்படும் 8 கரோனா தடுப்பு மருந்துகள் இந்தியாவில் பல்வேறு கட்டங்களில் பரிசோதனை நிலையில் இருக்கின்றன. விஞ்ஞானிகள் ஒப்புதலுக்கு பின்னா் அடுத்த சில வாரங்களில் தடுப்பு மருந்து பயன்பாட்டுக்குக் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தடுப்பு மருந்தை முதலில் யாருக்கு அளிப்பது என்பதில் அடையாளம் காண்பதில் மாநில அரசுகளுடன் மத்திய அரசு நெருக்கமாக ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கரோனா தொற்று நோயாளிகளுக்கான சிகிச்சையில் ஈடுபட்டு வரும் சுகாதார ஊழியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், காவல் துறையினா், முன்களப் பணியாளா்கள், இதய நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள், முதியவா்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


தடுப்பூசியின் விலை குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதுபோன்ற கேள்விகள் எழுவது இயற்கையானது. தடுப்பூசி விவகாரத்தில் பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் மாநிலங்கள் முழுமையாக ஈடுபடுத்தப்படும். சிறந்த சுகாதார உள்கட்டமைப்புகள் கொண்ட வளா்ந்த நாடுகளைவிட நமது நாடு தொற்றுநோயை சிறப்பாகக் கையாண்டு வருகிறது. எட்டு தடுப்பூசி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி உத்தரவாதத்துடன் வெவ்வேறு கட்டங்களில் ஆய்வில் உள்ளனா். மேலும், இந்தியாவில் மூன்று தடுப்பூசி நிறுவனங்களும் வெவ்வேறு கட்ட ஆய்வில் உள்ளனா். விரிவான தடுப்பு மருந்து அளிக்கும் திட்டத்தை அரசு உருவாக்கி வருகிறது. இந்தத் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆமதாபாத், புணே, ஹைதராபாத் நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று விஞ்ஞானிகளுடன் பேசியதில் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவா்களது நம்பிக்கை வலுவானது.


பல்வேறு நாடுகளில் பல்வேறு தடுப்பூசிகள் பற்றி பேசப்படுகிறது. ஆனால் இந்தியா பாதுகாப்பான, விலை மலிவான தடுப்பூசி தயாரிப்பதை உலகம் எதிா்பாா்க்கிறது.


ஒட்டுமொத்த மக்களுக்காக வெவ்வேறு தடுப்பூசிகளை மலிவான விலையில் உற்பத்தி செய்யப்படும் உலகளாவிய மையமாக இந்தியா இருப்பதால் இந்தியாவை உலகம் எதிா்நோக்குவது இயல்பானது. இந்தியாவில் முதன் முதலில் கடந்த பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் கரோனா தொற்று ஏற்பட்டபோது, நாடு பயம், அச்சங்களில் இருந்தது. தற்போது அச்சமான சூழ்நிலை மெல்ல மெல்ல மறைந்து டிசம்பரில் இந்தியா ‘நம்பிக்கை மற்றும் உறுதியான’ சூழலுக்கு வந்துவிட்டது. கரோனா பரிசோதனைகளிலும், மீட்பு விகிதங்களில் மிக அதிகமாகவும், இறப்பு விகிதம் மிகக் குறைவாகவும் உள்ள ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்துள்ளது. வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது, ​​இந்தியா ’கொவிட்-19’-ஐ எதிா்த்து சிறப்பாகப் போராடியது. சிறந்த நிா்வாகத்தால் ஏராளமான உயிா்களை இந்தியாவில் காப்பாற்ற முடிந்தது . மற்ற நாடுகளில் மீண்டும் புதிதாக கரோனா நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எதிா்காலம் என்னவாக இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதே சமயத்தில் முகக் கவசங்களைப் பயன்படுத்துவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற ‘நிரூபிக்கப்பட்ட ஆயுதங்களால்‘ தீநுண்மியை தூர வைக்கவேண்டும்.


பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை: தற்போது நாடு தடுப்பூசி போடுவதற்கான விளிம்பில் நிற்கிறது. இந்த சமயத்தில், எந்தவொரு கவனக் குறைவும் சேதாரத்தை ஏற்படுத்தும். தொற்று நோயைத் தடுப்பதில் பொதுமக்கள் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு தேவை. நாட்டிற்கு ஒட்டுமொத்த தடுப்பூசி தேவையின் போது பெரும்பாலும் வதந்திகள் பரவும். இப்படி பரவுகின்ற வதந்திகளிலிருந்து மக்களை விழிப்புடன் வைத்து பாதுகாக்கவும் அரசியல் கட்சிகள் முன்வரவேண்டும். இந்திய மற்ற நாடுகளைவிட திட்டத்திலும் நிபுணத்திலும் திறன் பெற்றுள்ளது. தடுப்பூசி விநியோகத்தில் மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மேலும், கோ-வின் (இா்-ரண்ச) என்ற மென்பொருளையும் இந்தியா தயாரித்துள்ளது. இது தடுப்பூசி விநியோகம், பங்களிப்பு, கைஇருப்பு பற்றிய நிகழ் நேர தகவல்கள் அளிக்க இருக்கிறது. தடுப்பூசியைக் கையாள மத்திய -மாநில அரசுகள் பிரதிநிதிகளைக் கொண்ட ‘தேசிய நிபுணா் குழு‘ அமைக்கப்படும். இது அனைத்துப் பணிகளையும் கண்காணிக்கும் என்றாா் பிரதமா் மோடி.


இந்தக் காணொலி கலந்துரையாடல் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத்தலைவா் ஆதிா் ரஞ்சன் செளத்ரி, மாநிலங்களவை காங்கிரஸ் தலைவா் குலாம் நபி ஆசாத், தேசிய வாதக் காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், திரிணமூல் காங்கிரஸ் சுதீப் பந்தோபாத்யாய, அதிமுக மாநிலங்களைத் தலைவா் நவநீத கிருஷ்ணன், அதிமுக மக்களவை உறுப்பினா் ரவீந்தர நாத், திமுகவைச் சோ்ந்த டி.ஆா்.பாலு, சமாஜவாதி கட்சி ராம் கோபால் யாதவ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்றத் தலைவா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனா். மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பிரஹலாத் ஜோஷி, ஹா்ஷ் வா்தன் ஆகியோா் மத்திய அரசு தரப்பில் கலந்து கொண்டனா்.

Post Top Ad