தமிழகத்தில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, December 18, 2020

தமிழகத்தில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை!




ஐஐடி சென்னையில் பயிலும் மாணவர்களுக்குக் கரோனா தொற்று  பரவியுள்ளதைக் கண்டறிந்ததால், மாநிலம் முழுவதும் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியருக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்படும் எனச் சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் இன்று (17-ம் தேதி) சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் ஆய்வுப் பணி மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் உள்ள காது, மூக்கு தொண்டைப் பிரிவு, பிரசவ வார்டு, கேன்டீன்களில் ஆய்வு செய்தார்.


கேன்டீனில் மக்கள் கூட்டமாகவும், முகக்கவசம் அணியாமல் இருந்ததையும் பார்வையிட்ட ராதாகிருஷ்ணன், அனைவரும் முகக்கவசம் அணியவும், கட்டாயம் தனிமனித இடைவெளியைப் பின்பற்றிட வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

''கரோனா தொற்றில் இருந்து மீண்டர்கள் குறித்து மூத்த மருத்துவர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. தினமும் 75 ஆயிரம் பேருக்கு நடத்தப்படும் பரிசோதனையில், கரோனா தொற்று  எண்ணிக்கை ஆயிரத்து 100 என்ற எண்ணிக்கையில்தான் உள்ளது.

2 ஆயிரம் பேருக்குக் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்வதில், பத்து முதல் 20 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது உறுதியாகிறது. சேலத்தில் இதுவரை 767 பேருக்குக் கரோனா தொற்றுக்குச் சிகிச்சை அளித்துவந்த நிலையில், தற்போது, 83 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

மாநிலம் முழுவதும் கரோனா தொற்று  உயிரிழப்பு ஒரு சதவீதமாக உள்ளது. கரோனா பாதிப்பு இரண்டு சதவீதமாக உள்ளது. இதனைப் பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் விடுதிகள், கேன்டீன்கள், மேன்ஷன்கள், மெஸ்களில் மாணவ, மாணவியர்கள் கூட்டமாக இருக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்.

மூடிய அறையில் 20க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது. முகக்கவசம் அணிவதைக் கைவிடக்கூடாது. தடுப்பூசி, பயன்பாட்டுக்கு வரும்வரை களப்பணியாளர்கள் உள்பட அனைவரும் கரோனா தொற்று  விதிமுறைகளைப் பின்பற்றிட வேண்டும்.

சென்னை ஐஐடியில் மாணவர்களுக்குக் கரோனா தொற்று  கண்டறியப்பட்டதை அடுத்து, இரண்டு பிளாக்கில் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இறுதியாண்டு மற்றும் முதுநிலை மாணவ, மாணவியர்கள் கல்லூரிகளுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

எனவே, மாநிலம் முழுவதும் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியருக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்படும். அதனால், மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை. பல கல்லூரிகளில் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அதனை மாணவர்கள் பின்பற்றலாம்.

கரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளவர்களுக்கு மனநல பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மனநல நிபுணர்களைக் கொண்டு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகப் பொதுமக்கள் புகார் அளித்தால், உடனடியாக ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்''.

இவ்வாறு முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இந்த ஆய்வுப் பணியில் டீன் பாலாஜிநாதன், கண்காணிப்பாளர் தனபால், சேலம் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி நிறுவன இயக்குனர் பூங்கொடி மற்றும் மருத்துவக் கல்லூரித் துறைத் தலைவர்கள் சுமதி, சுரேஷ்கண்ணா, சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post Top Ad