ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதில் பிரச்னை ஏன்? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, February 10, 2020

ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதில் பிரச்னை ஏன்?

ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதில் பிரச்னை ஏன்?

தமிழகத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதில் எழுந்துள்ள பிரச்னை காரணமாக, பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்று அகில  இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

 தமிழகத்தில் தற்போது 500 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் அரசு பொறியியல் கல்லூரிகள் தவிர்த்து தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கான  கட்டணங்களை நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன் தலைமையில் கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் சார்பில் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு பிறகு பொறியியல் கல்லூரிகளின் கட்டணங்கள் மாற்றி  அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், மேற்கண்ட கட்டண குழுவின் தலைவரான நீதிபதி பாலசுப்ரமணியன் கடந்த ஆண்டு மறைந்ததை அடுத்து, இன்னும் அந்த குழுவுக்கு தலைவர் நியமிக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் அரசு அங்கீகாரம் பெற்று இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்த்த வேண்டும் என்ற பிரச்னை அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படையில்  குறைந்த பட்சம்  பொறியியல் படிப்புகளுக்கான கட்டணத்தை 50 சதவீமாகவாவது உயர்த்தினால், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியும் என்று தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஏஐசிடிஇக்கு கோரிக்கை வைத்துள்ளன. அதனால், அனைத்து மாநில  அரசுகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட குழுவினர் உடனடியாக ஆய்வு செய்து, பொறியியல் படிப்புகள் மற்றும் இதர தொழில் நுட்ப படிப்புகளுக்கான கட்டணங்களை நிர்ணயம் வேண்டும் என்று  ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் தற்போது 500 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கட்டணக் குழுவுக்கு தலைவர்  நியமிக்கப்படாமல் இருப்பதால் உடனடியாக அதற்கான தலைவரை நியமித்து 2020-2021ம் கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை உயர்த்தித் தர வேண்டும் என்றும் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாகத்தினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அதன்பேரில், அந்தந்த மாநிலங்களில் செயல்படும் கட்டண குழுவினர், மத்திய அரசு அறிவித்த 6 மற்றும் 7வது ஊதியக் குழுவின் அறிவிப்புகளை அடிப்படையாகக் கொண்டும், இதர வரையறைகளைக் கொண்டும் பொறியியல் படிப்புகளுக்கான  கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பெரும்பாலான கட்டண குழுக்கள் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் போது ஏஐசிடிஇயின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் செயல்படுவதாக சில  உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்காக செலவு செய்த பணத்தை அரசிடம் இருந்து திரும்பப் பெறுவதில் கால தாமதம் ஆகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தேவையான, வரவு செலவுகளின் அடிப்படையில் கட்டணம் அமைக்கப்பட வேண்டும் அப்படி  நிர்ணம் செய்தால் தான் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்க முடியும், தரமான கல்வியை வழங்க முடியும்,  அடிப்படை வசதிகளை செய்ய முடியும். கட்டண குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ணா இருந்தபோது பிஇ, பிடெக் படிப்புகளுக்கு அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ரூ.1.44 லட்சம்  முதல் ரூ.1.58 லட்சம் என்று  நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் குறைந்தபட்சம் கட்டணம் என்பது இல்லை. இது போன்ற பிரச்னைகளுக்கு இடையில், தற்போது 7வது ஊதியக்குழுவின் ஊதிய அளவுகளின் அடிப்படையில்  பொறியியல் கல்லூரிகள் ஊதியம் வழங்க  வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

புதிய ஊதிய அளவின்படி புதியதாக  உதவிப் பேராசிரியர் பணியில் சேருவோருக்கு அலவன்ஸ்கள் இல்லாமல் அடிப்படை சம்பளம் ரூ.57 ஆயிரம் வருகிறது. தற்போதைய ஊதிய அளவின்படி மேற்கண்ட ஊதியத்தை தங்களால் வழங்க   முடியாது என்று தமிழக பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். இதையடுத்து தற்போது ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரைதான் ஊதியம் வழங்கி வருகின்றன. சில நேரங்களில் புதியதா சேருவோருக்கு ரூ.10 ஆயிரம்  மட்டுமே வழங்கும் நிலையும் உள்ளது. அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கும் கல்விக் கட்டணம் ரூ.85 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யும்பட்சத்தில் எங்களால் புதிய ஊதிய அளவின்படி சம்பளம் வழங்க முடியும் என்றும்  தனியார் பொறியியல் கல்லூரிகள் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு கல்லூரியும் குறைந்தபட்சம் 70 சதவீத இடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால் 30 சதவீத கல்லூரிகளால் அந்த அளவில் இடங்களை பூர்த்தி செய்ய  முடிவதில்லை. அதனால் அனைத்து வகை பாடப்பிரிவுகளுக்கும், அனைத்து வகை  கல்லூரிகளுக்குமான கட்டணத்தை மேலும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது அழுத்தமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இயங்கும் கட்டணக் குழுவுக்கு இன்னும் தலைவர் நியமிக்கப்படவில்லை. அதனால் 2020-2021 கல்வி ஆண்டுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டியுள்ளது. அதனால் தனியார் பொறியியல் கல்லூரிகளின்  கோரிக்கையின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டால் தான் தரமான ஆசிரியர்களை கொண்டு தரமான கல்வியை வழங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கட்டணம் அவசியம் உயர்த்தப்பட வேண்டும். ஆனால்,  மாநில அரசும், அண்ணா பல்கலைக் கழகமும் புதிய ஊதியக் குழுவின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகள் ஊதியம் வழங்குகின்றனவா என்று கண்காணிக்க வேண்டும் என்று முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

Post Top Ad