ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும்’ - ஸ்டாலின் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, December 28, 2020

ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும்’ - ஸ்டாலின்



 திமுக ஆட்சி மலரும்போது ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும்’ - ஸ்டாலின் சென்னை: திமுக ஆட்சி மலரும் போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்த கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார். தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பணிபுரிந்த காலத்தில் உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.


 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பணிபுரிந்த காலத்தில் உயிரிழந்த பட்டதாரி ஆசிரியர் பெஞ்சமின், சுமா, ஆனந்தன், சிலம்புச்செல்வி ஆகியோரின் குடும்பத்திற்கான நிதியுதவியை தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் வழங்கினார் நிதியுதவி வழங்கும்போது.. இந்த நிகச்சியில் பேசிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன், ”நடைமுறையில் இருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். அவர்களுக்கு இதுவரை எவ்வித ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை.


 

ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய திமுக, மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கும்போது புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்தார். அதன் பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின், ”மாநில தலைவர் தியாகராஜன் பேசும்போது முன்வைத்த கோரிக்கையை திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வோம். அது சார்ந்து அமைக்கப்பட்ட குழு அதற்காக தீவிரமாக பணியாற்றிவருகிறது. தேர்தல் அறிக்கையில் வருவதை முன்கூட்டியே சொல்வது ஏற்புடையதாக இருக்காது.


 

உங்களுக்கு திமுக தேர்தல் அறிக்கையில் நல்லதை அறிவிக்கும் என்ற நம்பிக்கை இருக்கும். அது போலவே உங்களை நம்பித்தான் நாங்களும் இருக்கிறோம். திமுக ஆட்சி மலரும்போது உங்களுடைய கோரிக்கைகள், குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்த கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும்” என்று உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதுமிருந்து சுமார் 800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

Post Top Ad