சனிப் பெயர்ச்சி பலன்கள் - கன்னி - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, December 20, 2020

சனிப் பெயர்ச்சி பலன்கள் - கன்னி


கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

அம்மான்காரனான புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே நீங்கள் முன் வைத்த காலை பின் வைக்காமல் வெற்றி நடை போடுபவர்கள். நீங்கள் யாரையாவது நம்பிவிட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வரமாட்டீர்கள். எந்த விதமான சிரமங்களையும் சமாளித்து வாழ்வில் வெற்றிக்கனியை பறிப்பீர்கள். கொஞ்சம் கர்வம் உடையவர்கள் நீங்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப்பெயர்ச்சி:




கிரகநிலை:

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சனி பகவான், தற்பொழுது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய சனிபகவான் தனது மூன்றாம் பார்வையாக உங்களுடைய சப்தம களத்திர ஸ்தானம் - ஏழாம் பார்வையாக உங்களுடைய லாப ஸ்தானம் - பத்தாம் பார்வையாக உங்களுடைய தன வாக்கு குடும்ப ராசியையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் கிரகநிலை:

குரு பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான மகர ராசியில் இருக்கிறார்.
ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் - கேது பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.

இந்த சனிப் பெயர்ச்சியில் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். சில அன்பர்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். பிறரின் முகபாவனைகளைக் கண்டே அவர்களின் மனதை அறிந்துகொள்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். ஆன்மீகப் பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். இக்கட்டான சூழ்நிலைகளில் உணர்ச்சி வசப்படாமல் பொறுமை காக்கவும். வேகத்துடன் விவேகத்தையும் கூட்டிக்கொண்டால் உங்கள் செயல்கள் அனைத்தும் திட்டமிட்டபடி குறிக்கோள்களை எட்டும்.

புதிய முதலீடுகளில் ஈடுபட்டு வருங்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் திடீரென்று பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே தீரும். தீயவர்கள் உங்களை விட்டு தாமாகவே விலகி விடும் அதிசயம் நிகழும். அதேநேரம் இளைய சகோதரர்களுடனான உறவில் சில சலசலப்புகள் ஏற்படும். ஆனாலும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு அவற்றை சமாளிப்பீர்கள். சிலர் தற்போது வசிக்கும் வீட்டிலிருந்து பெரிய வீட்டிற்குக் குடிபெயர்வார்கள். உங்கள் புகழும், கௌரவமும் உயரும். இது நாள் வரை தேவையற்ற வீண் பழி சுமந்த சிலர், அவற்றிலிருந்து விடுபடுவார்கள். உங்களின் முயற்சிகள் பல மடங்காக உயர்ந்து, அதற்கேற்ற வெற்றி கிடைக்கும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்கள் துரிதமாக நடக்கும்.

குடும்பத்தில் அரங்கேறும் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷம் அடைவீர்கள். உங்கள் பேச்சில் அவ்வப்போது ஆணவம் தலை தூக்க நேரலாம். கவனத்துடன் அதைத் தவிர்த்துக் கொள்ளவும். உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும்; தன்னம்பிக்கை உயரும். உங்களின் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். புதிய பொறுப்புகள் தாமாகவே தேடி வரும். வருமானம் நல்ல முறையில் வந்தாலும், சிலருக்கு குறுக்கு வழியில் செல்ல மனம் நினைக்கும். எனவே மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு நேர் வழியில் செல்லவும். இதன்மூலம் பல பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம்.

உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருக்கும். இதனால் மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். மேலும் அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் வேலைகளைச் சரியாகத் திட்டமிட்டு செய்வீர்கள். மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவராக உயர்வீர்கள்.

வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். அதேசமயம் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் நன்றாகச் சிந்தித்த பிறகே ஈடுபடவும்.

அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் கடமைகளை சுறுசுறுப்புடன் செய்வீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆயினும் எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும்.

கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். சில நிறுவனங்களால் முந்தைய காலகட்டத்தில் நேரிட்ட மன வருத்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு உழைப்பது, முன்னேற்றத்திற்கு உதவும். ரசிகர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.

பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். ஆலயங்களுக்குச் சென்று ஆன்மீக பலம் பெறுவீர்கள். மற்றபடி அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு குழப்பங்களைத் தவிர்க்கவும்.

மாணவமணிகளுக்கு நினைவாற்றல் பெருகும். இதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உபரி நேரங்களில் மனதிற்குப் பிடித்த கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள். அதேநேரம் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:

இந்த சனிப் பெயர்ச்சியால் உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

அஸ்தம்:

இந்த சனிப் பெயர்ச்சியால் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.

சித்திரை 1, 2, பாதங்கள்:

இந்த சனிப் பெயர்ச்சியில் கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.


அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, மேற்கு
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பரிகாரம்:

தினமும் அருகிலிருக்கும் பெருமாளுக்கு துளசி கொடுத்து வணங்கி வர குடும்ப பிரச்சனை தீரும். பொருளாதார சிக்கல்கள் அகலும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் ஸ்ரீசாஸ்தாய நம" என்ற மந்திரத்தை தினமும் 5 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன்

ஆக்கம்:  ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் 

Post Top Ad