மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள், பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும்: அமைச்சர் வேண்டுகோள் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, December 22, 2020

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள், பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும்: அமைச்சர் வேண்டுகோள்


பெங்களூரு:மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுமூக தீர்வு எட்டுவதற்கு பெற்றோர்கள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 கர்நாடக மாநிலத்தில் வருகிற ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகள் தொடங்குகின்றன. அத்துடன் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு வித்யகாமா திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. அரசின் அறிவிப்பை தொடர்ந்து பள்ளிகளில் கிருமிநாசினி உதவியால் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற தொடங்கியுள்ளன.

இந்நிலையில் தனியார் பள்ளி நிர்வாகிகள் 15 அம்ச கோரிக்கையுடன் வருகிற 6ம்தேதி சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்ற எச்சரிக்கையுடன் அரசுக்கு நோட்டீஸ் அளித்துள்ளனர்.

 அத்துடன் ஆன்லைன், ஆப்லைன் வகுப்புகள் நடைபெறாது என்றும் அதிரடியாக அறிவித்து போராட்டத்தில்  குதித்துள்ளனர். தனியார் பள்ளிக்கூட நிர்வாகிகளின் திடீர் போராட்டம் அரசுக்கு நெருக்கடியை அளித்துள்ளது. இதற்கிடையே தனியார் பள்ளிக்கூட நிர்வாகம் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாகவும் அரசு அதை தடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தனியார் பள்ளிக்கூட நிர்வாகிகள் போராட்டம் மற்றும்  பெற்றோர்களின் போராட்டம் முதல்வர் எடியூரப்பாவுக்கு தலைவலியாக மாறியது. இதைத்தொடர்ந்து  பெற்றோர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளின் போராட்டத்திற்கு தீர்வு காணவேண்டும் என்று  கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமாருக்கு உத்தரவிட்டார்.

 முதல்வர் எடியூரப்பாவின் உத்தரவை தொடர்ந்து கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோருடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு தரப்பினரும் தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் நடத்துவோம் என கூறிய நிலையில் மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் சமூக வலைதளமான பேஸ்புக் மூலமாக  கடிதம் எழுதியுள்ளார்.

தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்களுக்கு அமைச்சர் சுரேஷ்குமார் எழுதிய  கடிதத்தில் கூறப்பட்டுள்ளது:

கல்வி மிகவும் அவசியமாகும். மாணவ, மாணவிகளின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்றால் அதற்கு கல்வியே அடிப்படை ஆகும். கொரோனா வைரசின் காரணமாக பள்ளிக்கூடங்கள் இயங்கவில்லை. ஆனாலும் மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை முன்னிட்டு ஆன்லைன் வாயிலாக பாடம் கற்பிக்கப்பட்டது. கொரோனா காரணமாக பெற்றோர்களின் வருமானம் பாதிக்கப்பட்டது.

 சாப்பாட்டு பிரச்னையே மிகப்பெரிய சவாலாக மாறிய நிலையில் பள்ளிக்கூட கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தங்களின் மகள், மகன் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக வரிசையில் நின்றும், எம்எல்ஏ, எம்பி. உள்ளிட்டோரின் சிபாரிசு கடிதம் பெற்று பிரபல பள்ளிக்கூடத்தில் விண்ணப்பம் செய்யப்படுகிறது.

அதே நேரம் கொரோனா பாதிப்பின் காரணமாக இப்போது கட்டணம் செலுத்த முடியாத நிலையில் பெற்றோர்கள் சிக்கியுள்ளனர்.

அதே நேரம் தனியார் பள்ளிக்கூட ஆசிரியர், ஆசிரியைகளின் நிலைமையும் பரிதாபமாக மாறிவிட்டது. ஆசிரியர், ஆசிரியைகள் வருமானத்திற்கு வழி இல்லை என்பதால் காய்கறி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

 பெற்றோர்கள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்களின் போராட்டத்தினால் மாணவ மாணவிகள் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடக்கூடாது. எனவே, இரண்டு தரப்பினரும் இந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காணவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என்றார்.

Post Top Ad