உரிமைக்குப் போராடிய காலம் சென்று , கண்ணியத்திற்கு போராட வேண்டிய தருணத்தில் ஆசிரியர்கள்

உரிமைக்குப் போராடிய காலம் சென்று , கண்ணியத்திற்கு போராட வேண்டிய தருணத்தில் ஆசிரியர்கள்

    

இன்று ஆசிரியர் சமுதாயம் பல்வேறு இன்னல்களையும் அவதூறுகளையும் நோக்கி பயணித்து வருகிறது. ஆசிரியர் பணி என்றால் அறப்பணி என்ற காலம் சென்று இன்று ஆசிரியர் பணி என்றால் மற்றவர்களால் எள்ளி நகையாட கூடிய நிலையில் உள்ளது. இது ஆசிரியர் சமுதாயத்தை தரம் தாழ்த்தவில்லை தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்வதற்கு சமம். ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி கொண்டேதான் இருக்கிறான். அத்தகைய திறமைகளை வெளிக்கொண்டு வந்ததற்கு ஏதோ ஒரு ஆசிரியர் அவரது வாழ்க்கையில் நிச்சயமாக முக்கிய பங்காற்றி இருப்பார்கள். ஆனால் இன்று அவர் வாங்கும் சம்பளம் அவர்களுடைய பணி அவர்களுடைய அர்ப்பணிப்பு ஆகியவற்றை யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளால் முழுவதுமாகவே வஞ்சிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக ஒருவர் செய்யும் தவறினை அவர் மீது சுமத்தாமல் ஒரு சமுதாயத்தையே குற்றம் சாட்டுவது அப்பட்டமான நாகரீகமற்ற செயலாகும். என்றாவது, ஆசிரியர்கள் சமுதாயத்திற்கு விரோதமாகவோ அல்லது கல்வி பயிலக் கூடிய மாணவனின் எதிர்காலத்திற்கு கேடுவிளைவிக்கும் எண்ணத்தோடு என்றும் செயல்பட்டது இல்லை. அப்படி இருக்க அவருக்கு அளிக்கக்கூடிய மாத சம்பளம் சலுகைகள் போன்றவற்றை எள்ளி நகையாடுவது வியப்பாக உள்ளது. மாதா பிதா குரு தெய்வம் என்று வார்த்தைகளால் போற்றுதலுக்கு உட்பட்ட இந்த ஆசிரியர் சமுதாயத்தினை கேவலமாகவும் இழிவாகவும் பேசுவது வருந்தத்தக்கது.   உன் தாயோ அல்லது தந்தையோ தரம்தாழ்த்தி கூறினால் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போவாயோ அதே அளவிற்கு ஆசிரியரை தரம் தாழ்ந்து பேசினால் உன்னை நீயே தரம் தாழ்த்திக் கொள்வதற்கு சமம். ஒவ்வொரு ஆசிரியரும் தான் வாங்கும் சம்பளத்தை காட்டிலும் மிக அதிகமாகவே உழைத்து வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. தங்களுடைய நியாயமான காரணங்களுக்காக போராடும் போது இந்த சமுதாயம் அதைப் பற்றி அறிந்து கொள்ளாமல் தவறான கண்ணோட்டத்துடன் சமுதாயத்தின் மீது தேவையற்ற பழிச்சொற்கள் தூக்கி எறிவது மிகவும் வேதனைக்குரியது. நாமும் ஏதோ ஒரு ஆசிரியரிடமிருந்து ஏதோ சிலவற்றை அறிந்து கொண்டு தான் வாழ்க்கை என்னும் பயணத்தில் கடந்து சென்று கொண்டிருக்கிறோம் அவ்வாறு இருக்கையில் அவர்களின் மீது நன்மதிப்பு உருவாக வேண்டுமே தவிர தரம்தாழ்ந்த வார்த்தைகளால் அவர்களை விமர்சனம் செய்வது வேதனைக்குரிய செயலாகும். ஆசிரியர் பணி பள்ளி நேரத்தில் மட்டுமே நிறைவடைவது இல்லை பள்ளி நேரத்தையும் கடந்து தொடர்கிறது என்பது எத்தனை பேர் அறிந்த உண்மை. பல்வேறு இன்னல்களுக்கிடையே மாணவரின் நலன் கருதி செயல்பட்டு வரும்  தயவுகூர்ந்து ஆசிரியர்களை கௌரவப்படுத்த விட்டாலும் பரவாயில்லை தரம் தாழ்த்திப் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்  -   ராஜராஜன்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive